ரியூப் தமிழ் எப்.எம். ஓராண்டு நிறைவு தமிழர் நடுவம் வாழ்த்து செய்தி

ரியூப் தமிழ் எப்.எம் முதலாம் ஆண்டு விழா யாழ்பாணத்தில்..

இன்று (18.11.2018) யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ரியூப் தமிழ் காரியாலயத்தில் #ரியூப்தமிழ் எப்.எம் வானொலி தொடங்கிய முதலாம் ஆண்டு வெற்றி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது என்கிற செய்தியை கேட்டு தமிழர் நடுவம் பெருமகிழ்ச்சி கொள்கிறது.

உலக அரங்கில் மக்களின் எண்ணங்களையும், சிந்தனையையும், சமூக உளவியலையும், கலாச்சார பண்பாட்டு விழுமியங்களையும், காலந்தோறும் மாறிக்கொண்டே இருக்கும் அறத்தின் இயங்கியலையும் முன்னின்று வடிவமைக்கும் பிரதான வேலையை செய்யும் முழுமுதற் கருவியான ஊடகங்கள் யாவும் தனக்கு வகுத்துக் கொடுத்த பாதையில் பயணிக்க, உலகத் தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவும், தகவல் பரிமாற்றம் செய்யவும், பேரழிவு போருக்கு பின்பாக மக்களின் உளவியலை மேம்படுத்தவும் நமக்கே நமக்காக ஓர் ஊடகம் இல்லையே என்றிருந்த உலகத் தமிழர்களின் உள்ளக்குமுறலை தீர்க்கும் வகையில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவெடுத்த ரியூப் தமிழ் ஊடகம் பின்னாளில் ஊடக வடிவங்களின் வெவ்வேறு பரிமாணங்களை தகவமைத்துக் கொண்டது வரவேற்க வேண்டிய விடயம்.

அந்த வகையில் ரியூப் தமிழ் நிறுவனமானது நமக்கான வானொலி சேவையாக “ரியூப் தமிழ் எப் எம்” துவங்கி இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுவது மகிழ்வான நிகழ்வாகும், நமது மகிழ்வை இரட்டிப்பாக்கும் வகையில் ரியூப் தமிழ் நிறுவனமானது புதிதாக புத்தக சந்தையிலும் கால்பதித்திருப்பது மிகவும் வரவேற்கத் தக்கதாகும், இதை உலகத் தமிழர்கள் யாவரும் வரவேற்று கொண்டாடுவார்கள் என்பதோடு உலகின் மிகச்சிறந்த படைப்புகள் யாவும் தமிழ் இளைஞர்களைச் சென்று சேர வேண்டும் என்று வேட்கைகொண்டு, அதற்காகவே “தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்” என்ற பதிப்பகத்தையும் துவங்கி தமிழரிடையே பல்வேறு அரிய படைப்புகளை கொண்டு சேர்த்து வந்த தமிழர் நடுவத்தின் தலைவர், உலகத் தமிழர்கள் மத்தியில் தமிழர் தேசிய தந்தை என்று பெருமையுடன் போற்றப்படுபவர், என்னாளும் எம்மை பாண்டிய ஒளியாக இருந்து வழிநடத்தும் செல்வா பாண்டியர் அவர்களும் உள்ளம் மகிழ்ந்து தனது ஆசியை வழங்குவார் என்று பதிவு செய்து தமிழர் நடுவம் தனது வாழ்த்துகளை தங்களோடு பகிர்ந்து கொள்கிறது.

இவண்
தமிழர் நடுவம்

Related posts