டென்மார்க்கில் இருந்து ரவிசங்கர் சுகதேவன் வழங்கும் வாழ்த்துச் செய்தி

ரியூப் தமிழ் எப்.எம். முதலாவது ஆண்டில் கால்பதிப்பது எனது உள்ளத்தின் ஓரத்திலே மழைச்சாரல் அடித்த மகிழ்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 24 மணி நேரமும் ஒலி வாங்கியின் முன்னால் இருந்து நீங்கள் கொடுக்கும் இனிமையான தமிழ்க் குரலின் முத்தான ஒலிகள் வான்வெளியில் இருந்து தமிழ் முத்துக்களாய் கொட்டுப்படக் கண்டு பூரிப்படைகிறேன்.

இன்னிசையின் இளவரசன் என்ற பெயரில் வெற்றி நடைபோடும் நீங்கள் யாழ். மண்ணில் இருந்து ஒரு புதிய வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனது வாழ்த்தை வரைந்து செல்கிறேன். நாம் இந்தப் பூமிக்கு ஒரு தடவை மட்டுமே வருகிறோம்.. நாம் கண்டிப்பாக ஒரு நல்ல காரியத்தை செய்துவிட வேண்டும்..! என்ற உயர்ந்த நோக்கம் உங்கள் ஒவ்வொருவரின் உள்ளத் துடிப்புக்களில் அதிர்வதையே இன்னிசை இளவரசன் இனிய பாடல்களாக பிரசவிக்கிறது.

24 மணி நேரமும் யாழ். மண்ணின் இதயமாய் இருந்து நீங்கள் செயற்படுவது சாதாரண வெற்றியல்ல கடந்த நூறு ஆண்டுகளில் நாம் காணாத வெற்றி..! உங்கள் குரல் கேட்டு வெளி நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் நெஞ்சங்களில் எல்லையில்லாத மகிழ்ச்சி உண்டாகிறது.

அன்றாடம் மரண ஓலம் கேட்ட மண்ணில் இருந்து முதற்தடவையாக புதிய குயில்கள் பாடுகின்றன. வானொலி என்றால் இவருக்குத்தான் சொந்தமென பட்டயம் குத்தப்பட்ட காலத்தை மாற்றி எங்களாலும் முடியும் என்று ஓராண்டு காலத்தில் நிறுவிவிட்டீர்கள்.. இது ஒரு புதுமை.. இதுவரை இல்லாத செய்தி.. கலை என்பது ஒருவருக்கு மட்டுமே உரிய சொத்தல்ல என்ற செய்தியும் உங்கள் குரலில் மின்னுகிறது.

இந்த நல்ல நாளானது உங்களுக்கும் எங்களுக்கும் சொல்லும் முக்கிய செய்தி ஒன்று..

போருக்கு பிந்திய இந்த வாழ்வை இனி நாம்தான் வெற்றி கொள்ள வேண்டும்.. நாம்தான் மீண்டெழ வேண்டும்.. நமக்காக வானத்தில் இருந்து யாரோ ஒரு தேவதை வருமென்று காத்திருக்க நம்மிடம் நேரமில்லை. இது உங்கள் காலம்..! ஒவ்வொரு இளைஞனும் ஆதியும் அந்தமும் நானே என்ற தனித்துவத்துடன் எழுந்து நிற்க வேண்டிய புதிய பொழுது..!

வானம் வசப்பட, உங்கள் கனவுகள் மெய்ப்பட என்றும் ரியூப் தமிழ் கை கொடுக்கும்.. கவலைகளை மறந்து கைளைக் கோர்த்து புதிய தடத்தில் கால் பதிக்கும் உங்கள் தன்னம்பிக்கை வெல்லும்.

தோள் கொடுத்து தூண்களாக நிற்கும் எமது அன்பான நேயர்கள், எம்மை தாங்கி நிற்கும் விளம்பரதாரர்கள், நிர்வாகிகள், அனைத்து பணியாளர்கள், அறிவிப்பாளர்கள், செய்தியாளர்கள், உள்ளிட இந்த வெற்றிக்கு முன்னாலும், இதற்கு மறைந்தும் நிற்கும் அனைவரையும் இந்த பொன்னான தருணத்தில் பாராட்டி, போற்றி மகிழ்கிறேன்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் புகழ் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

ரவிசங்கர் சுகதேவன் ( நிறுவனர் ரியூப்தமிழ் )

Related posts