2-ம் திருமணம் செய்ததாக விமர்சிப்பதா?

தமிழில் கில்லி, தமிழன், ஆறு, பகவதி, ஏழுமலை, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பிரபல வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. தனது மனைவி ராஜோஷியை விவாகரத்து செய்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ரூபாலி என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

இதை வலைத்தளத்தில் பலரும் விமர்சித்தனர். இதற்கு ஆஷிஷ் வித்யார்த்தி காட்டமாக பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “60 வயதாகும் உனக்கு திருமணம் தேவையா? முதல் மனைவிக்கு விவாகரத்து கொடுத்து விட்டாயா? என்று பலர் என்னை விமர்சிக்கின்றனர்.

இந்த வயதில் இன்னொரு துணை எதற்கு என்றும் கேலி செய்கின்றனர். எல்லோரது வாழ்க்கையும் ஒரே மாதிரி இருக்காது. வேறு வேறு நம்பிக்கையோடு வாழ்கிறோம்.

ஆனால் எல்லோரும் பொதுவாக எதிர்பார்ப்பது வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதுதான். 22 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட எனது முதல் மனைவிக்கும் எனக்கும் எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் வேறுவேறாக இருந்தன.

கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால் பிரிந்து விட்டோம். எனக்கு ஒரு துணை வேண்டும் என்று தோன்றியது. 55 வயதிலேயே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். அப்போதும் சர்ச்சை ஏற்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரூபாலியை சந்தித்து காதலித்தோம். கணவன் மனைவியாக வாழ முடிவு செய்து திருமணம் செய்து கொண்டோம். எனக்கு இப்போது 57 வயதுதான். இன்னும் 60 வயது ஆகிவிடவில்லை.

காதலில் வயதுக்கு வேலை இல்லை. இருவரும் சந்தோஷமாக இணைந்து பயணிப்போம்” என்றார்.

Related posts