ஒமிக்ரான் வைரசுக்கு தடுப்பூசி ரெடி…! – ரஷியா நம்பிக்கை

ஸ்புட்னிக் தடுப்பூசி ஒமிக்ரான் வைரஸ்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என ரஷியா சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

50 பிறழ்வுகளைக் கொண்டுள்ள உருமாறிய கொரோனா வைரசான ‘ஒமிக்ரான்’ தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ், இதுவரை கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ்களில் ஆபத்தானதாக கூறப்படுகிறது. இதனால் உலக நாடுகள் உஷாராக இருக்கின்றன. இருப்பினும் இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தோன்றி, பெல்ஜியம், இஸ்ரேல், ஹாங்காங்குக்கு ஏற்கெனவே பரவி விட்டது.

புதிதாகப் பரவி வரும் வீரிய கொரோனா ரகமான ஒமிக்ரான், ஏற்கெனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களை குறிவைத்து தாக்குகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரான், ஒரே வாரத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவி உள்ளது. அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகள், முந்தைய வகைகளை விட வேகமான பரவல், தற்போதைய தடுப்பூசிக்கு அடங்காதது என வெளியாகி வரும் பல தகவல்கள், ஒமிக்ரான் மீதான கவலையை அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகள் ஒமிக்ரான் கொரோனா வகைக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்று ரஷிய சுகாதாரத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரஷிய சுகாதாரத்துறை, ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகள் ஒமைக்ரான் கொரோனா வகை வைரஸை அழிக்கும் தன்மை கொண்டது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா வகை வைரசில், எத்தகைய திரிபுகள் ஏற்பட்டாலும், அவற்றை எதிர்கொள்ளும் திறன்வாய்ந்தவை ஸ்புட்னிக் தடுப்பூசி என்றும், தேவைப்பட்டால் லட்சக்கணக்கான பூஸ்டர் தடுப்பூசிகளை தயாரிக்கவிருப்பதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.

ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் நிர்வாக அதிகாரி கிரில் டெம்ட்ரிவ் கூறியதாவது;-

கமலேயா இன்ஸ்டிடியூட், கவலைக்குரிய ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக தடுப்பூசிகளை உடனடியாக தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.ஓமிக்ரானுக்கான தடுப்பூசியை 45 நாட்களில் பெருமளவில் தயார் செய்ய முடியும்.

ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் மற்ற பிறழ்வுகளுக்கு எதிராக மிக உயர்ந்த செயல்திறனைக் கொண்டிருப்பதால், ஓமிக்ரானை தடுக்கும் என கமலேயா நிறுவனம் நம்புகிறது. பிப்ரவரி 20, 2022க்குள் பல ஸ்புட்னிக் ஓமிக்ரான் பூஸ்டர்களை வழங்குவோம் என கூறினார்.

உலகிலேயே முதன்முதலில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த கொரோனா தடுப்பூசி ரஷியாவின் ஸ்புட்னிக்-வி. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ரஷியாவில் இந்த தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் இரண்டு டோஸ்கள் கொண்டது. வலுவிழந்த வைரஸை உடலுக்குள் செலுத்தி அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் தொழில்நுட்பம்தான் இதிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி செல்சியஸில் பராமரிக்கலாம். அதாவது வழக்கமாக பயன்படுத்தப்படும் குளிர்சாதன பெட்டியே போதும்.

Related posts