உதயநிதி ஸ்டாலின் – மாரி செல்வராஜ் படத்தில் வடிவேலு

நடிகர் உதயநிதி ஸ்டாலின் -மாரி செல்வராஜ் இணையும் படத்தில் வைகைப்புயல் வடிவேலு இணைவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் இயக்குனர் ஷங்கருடன் ஏற்பட்ட மோதலால் நகைச்சுவை நடிகர் வடிவேலு புதிய படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் பல வருடங்களாக அவரால் நடிக்க முடியவில்லை. சமீபத்தில் சமரச பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு தடை நீங்கியதால் வடிவேல் மீண்டும் உற்சாகத்தோடு நடிக்க வந்துள்ளார்.

சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். முழுக்க நகைச்சுவை படமாக தயாராகிறது. இந்த படத்தில் வரும் வடிவேலு தோற்றத்தை வெளியிட்டு உள்ளனர்.

இப்போது, உதயநிதியுடன், மாரி செல்வராஜ் இணையும் படத்தில், நடிகர் வடிவேலு இணையவுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய இரண்டு வெற்றிப் படங்களை வழங்கிய மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் நடிக்கும் மூன்றாவது இயக்கத்தில் ஹாட்ரிக் அடிப்பார் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து மாரி செல்வராஜ் தனது அடுத்தப் படத்திற்காக உதயநிதியுடன் கைகோர்ப்பார் எனக் கூறப்படுகிறது. தற்போது அதற்கான வேலைகளும் நடந்து வருகிறதாம். அந்தப் படத்தில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வடிவேலு – உதயநிதி – மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் துருவ் விக்ரம் – மாரி செல்வராஜ் படத்துக்கான வேலைகள் இன்னும் மீதமிருப்பதால், முதலில் உதயநிதியின் படத்தை இயக்க மாரி செல்வராஜ் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts