சோகமயமானது இராகலை – ஐவரின் சடலங்களும் அடக்கம்!

இராகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் தீ விபத்தால் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரின் இறுதி கிரியைகள் நேற்று (09) இரவு இடம்பெற்றன.

தோட்ட மக்கள் அணி திரண்டு கண்ணீர் மழ்க இறுதி கிரியைகளில் பங்கேற்று சடலங்களை தோட்ட மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.

தோட்ட மைதானத்தில் சடலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தன. தோட்டங்களில் உள்ள வீடுகளில் வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. தோட்ட மக்கள் எவரும் இன்று தொழிலுக்கு செல்லவில்லை.

இராகலையில் ஏற்பட்ட தீவிபத்துச் சம்பவத்தில் உடல் கருகிப் பலியோனோரின் சடலங்கள் தொடர்பில் நுவரெலியா சட்ட வைத்திய அதிகாரியால் திறந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், உடற் கூற்று மாதிரிகளை இராசாயண பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்படவேண்டும் என இன்று மாலை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் போது, உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்பட முடியாததால் இந்த திறந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இடம்பெற்றன.

இதன்போதே, நுவரெலியா சட்ட வைத்திய அதிகாரியால் மேற்படி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இராகலை இலக்கம் (01) தோட்ட பிரிவில் மண்ணால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தனி வீடு ஒன்று (07) இரவு பத்து மணி அளவில் தீ பிடித்துள்ளது.

இந்த திடீர் தீ விபத்து சம்பவத்தில் இவ் வீட்டில் வசித்து வந்த 6 பேரில் 2 சிறுவர்கள் உட்பட ஐவர் தீயில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.

இதன் போது குறித்த சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் மகள், மகளுடைய ஒரு வயது மற்றும் 12 வயது உடைய இரு ஆண் பிள்ளைகள் என ஐவர் தீயில் எரிந்து சம்பவ வீட்டிலேயே உயிரிழந்துள்ளனர்.

இராமையா தங்கையா (வயது 61), அவரின் மனைவி செவனமுத்து லெட்சுமி (வயது 57), ஆகியோருடன், மகளான தங்கையா நதியா (வயது 34) இவரின் பிள்ளைகளான, சத்தியநாதன் துவாரகன் (13), முதல் கணவரின் பிள்ளை) மற்றும் தற்போதைய தந்தையான மோகன்தாஸ் ஹெரோசன் (வயது 01) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-மலையக நிருபர் கிரிஷாந்தன்-

Related posts