நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் நடிகர் மம்முட்டி நெகிழ்ச்சி

மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் மம்முட்டி, தமிழில் தளபதி, அழகன், மவுனம் சம்மதம், மக்களாட்சி, அரசியல், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பேரன்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 7-ந்தேதி மம்முட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்தனர். இதனால் நெகிழ்ச்சியான மம்முட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது பிறந்த நாளில் எல்லோரும் காட்டிய அன்பை பார்த்து நெகிழ்ந்து போனேன். ரசிகர்கள் தங்கள் அன்பை பல வகையாக வெளிப்படுத்தி எனது மனதை தொட்டுவிட்டனர். பொதுவாக எனது பிறந்த நாளை கொண்டாட நான் தயங்குவது உண்டு. ஆனால் என்னை தெரிந்தவர்களும், தெரியாதவர்களும் வாழ்த்தியதால் இது சிறந்த நாளாக மாறி உள்ளது. இந்த தருணத்தில் நான் முழுவதுமாக ஆசீர்வதிக்கப்பட்டவனாக என்னை உணர்கிறேன். அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

———

கமல்ஹாசன் விக்ரம் படப்பிடிப்பில் தீவிரமாக பங்கேற்று வருகிறார். இதில் விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் வில்லன்களாக வருகிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு ஷங்கர் இயக்கத்தில் ஏற்கனவே பாதியில் நின்றுபோன இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 5 படப்பிடிப்பிலும் பங்கேற்க இருக்கிறார். இவற்றையெல்லாம் முடித்துவிட்டு தேவர் மகன் 2-ம் பாகத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மகேஷ் நாராயணன் இயக்குவார் என்று தெரிகிறது. இதில் விக்ரம், விஜய்சேதுபதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. பாபநாசம் 2-ம் பாகம் படத்தில் கமல்ஹாசன் நடிப்பதும் பரிசீலனையில் உள்ளது.
இந்த நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர்களை கமல்ஹாசன் சந்தித்து பேசி இருக்கிறார். இதன் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகும் படத்தில் கமல் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

——-

மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஆஷிஷ் பவ்ஷர். 42 வயதான ஆஷிஷ் சில திரைப்படங்களையும், ‘வெப்’ தொடரையும் தயாரித்துள்ளார்.
இதற்கிடையில், ‘வெப்’ தொடரில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக ஆஷிஷ் மீது கடந்த மார்ச் மாதம் 21 வயது நிரம்பிய இளம் பெண் மும்பை கோரிகன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கில் ஆஷிஷ் பவ்ஷர் முன் ஜாமீன் பெற்றிருந்தார். இந்நிலையில், ஆஷிஷ் பவ்ஷரின் முன் ஜாமீனை கோர்ட்டு ரத்து செய்து செய்தது.
இந்நிலையில், முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தயாரிப்பாளர் ஆஷிஷ் பவ்ஷரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஆஷிஷ் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக ஆஷிஷ் பவ்ஷரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Related posts