சிம்பு படப்பிடிப்புக்குத் தொடரும் பிரச்சினை..

சிம்பு படப்பிடிப்புக்குத் தொடரும் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர், முதல்வரைச் சந்திப்பேன் என்று தாயார் உஷா ராஜேந்தர் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால், சிம்புவின் ஒவ்வொரு படமுமே பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகி வருகின்றன. சமீபத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது சிக்கலானது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்பே தொடங்கப்பட்டது.
இதனிடையே, தனது மகன் சிலம்பரசனின் படங்களுக்கு வரும் தொடர் பிரச்சினைகள் மற்றும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் என்ன பிரச்சினை உள்ளிட்டவை குறித்துப் பேசியுள்ளார் உஷா ராஜேந்தர். அந்த வீடியோ பதிவில் உஷா ராஜேந்தர் பேசியிருப்பதாவது:
“‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார் சிலம்பரசன். அவருக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தை, பட வெளியீட்டுக்கு முன்பு கொடுக்கிறேன் என்று சொன்ன மைக்கேல் ராயப்பன் கொடுக்கவில்லை. எனது மீதி சம்பளத்தைக் கொடுத்துவிட்டுத் தான் படத்தை வெளியிட வேண்டும் என்று நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார் சிலம்பரசன். பட வெளியீட்டுக்கு முந்தைய நாள் சிலம்பரசனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை விட்டுக் கொடுத்தால் மட்டுமே, படம் நாளை வெளியாகும் என்கிறார் மைக்கேல் ராயப்பன். இது தொடர்பாக சிலம்பரசனிடம் கேட்கிறோம். பணமே வரவிட்டாலும் பரவாயில்லை, படத்தைத் தயாரிப்பாளர் வெளியிடட்டும் என்று சொல்லிவிட்டார். இந்த பணம் தவிர்த்து, முன்னதாக சிலம்பரசனுக்குக் கொடுத்த பணத்துக்கு மைக்கேல் ராயப்பன் ஜிஎஸ்டி கட்டவில்லை. டி.டி.எஸ் பிடித்துள்ளார், அதையும் கட்டவில்லை. முதலில் கொடுத்த செக் பணமில்லாமல் திரும்பிவிட்டது. இப்படி எந்தவிதத்திலுமே மைக்கேல் ராயப்பன் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
பணத்தையும் விட்டுக்கொடுத்து, படத்தையும் வெளியிட்ட பிறகு மீண்டும் ஒரு பஞ்சாயத்து வைத்தார். அதாவது சம்பளமே வாங்காமல் சிலம்பரசன் ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் விஷால் ஒரு தீர்மானம் போடுகிறார். மைக்கேல் ராயப்பனுக்கு சம்பளமே இல்லாமல் சிலம்பரசன் ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ஒவ்வொரு படத்துக்கும் 2 கோடியே 40 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்று எங்களுடைய ஒப்புதல் இல்லாமல் போடுகிறார்.
சிலம்பரசன் ஒப்புதல் இல்லாமல் தீர்மானம் கொண்டு வருவதற்கு இவர் என்ன உச்சநீதிமன்ற நீதிபதியா?. தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் கொண்டு வந்த தீர்மானத்துக்கு மேல்முறையீடே கிடையாது. எங்களைக் கப்பம் கட்டச் சொல்வதற்கு விஷால் யார்?. தயாரிப்பாளர் சங்கத்தின் ட்ரஸ்ட்டில் இருந்த 7 கோடி ரூபாய் பணத்தையும், உறுப்பினர்கள் பணமான 7 கோடியையும் பலவிதத்தில் விரயம் செய்து காலி செய்துவிட்டார். இந்த 14 கோடி ரூபாயை என்ன செய்தீர்கள் என்று பொதுக்குழுவில் சண்டைப் போடும் போது, பதில் சொல்ல முடியாமல் விஷால் ஓடிவிட்டார். நாங்கள் வெற்றி பெற்றால் 14 கோடி ரூபாயைப் பெற்றுத் தருவோம் என்று சொல்லி ஜெயித்தவர்கள் விஷாலை எதுவும் கேட்காமல், அவர் போட்ட தீர்மானத்தை வைத்துக் கொண்டு சிலம்பரசனுக்கு ரெட் கார்டு போடுகிறார்கள். இதை என்னவென்று சொல்வது.அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் வெளியான பிறகு தயாரிப்பாளர் அனைத்து பத்திரிகைகளிலும் சிலம்பரசனைப் பற்றி எவ்வளவு தவறாக சொல்ல முடியுமோ சொல்லிவிட்டார். ஒரு நடிகரை இந்தளவுக்கு ஒரு தயாரிப்பாளர் தவறாக பேசவே முடியாது. இதனைத் தொடர்ந்து மைக்கேல் ராயப்பன் மீது சிலம்பரசன் 1 கோடி ரூபாய்க்கு மானநஷ்ட வழக்குப் போட்டுள்ளார்.

இப்படியொரு தயாரிப்பாளருக்கு ஒரு படம் இலவசமாக நடித்துக் கொடுக்க வேண்டும், கப்பம் கட்ட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது எப்படி முடியும்?. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது, இவர்கள் எப்படி கட்டப் பஞ்சாயத்து செய்ய முடியும்? நாங்கள் சிலம்பரசனின் படத்துக்கு எந்தவித இடைஞ்சலும் அளிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார்கள்.தற்போது ஆகஸ்ட் 6-ம் தேதி ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பு தொடங்க விடமாட்டோம் என்று சொன்னார்கள். இந்த பஞ்சாயத்தைப் பேசி தீர்க்காமல் சிலம்பரசன் படப்பிடிப்புக்குப் போக முடியாது என்று சொன்னார்கள். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது இவர்கள் என்ன செய்துவிடுவார்கள் என்று பஞ்சாயத்து பேச வரச் சொன்னதுக்காக சென்றேன். நீதிமன்றத்தில் உள்ள மைக்கேல் ராயப்பன் விஷயத்தை எடுத்து வைத்து பேசுகிறார்கள். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நீதிமன்றத்தில் இருக்கும் விஷயத்தை எடுத்துப் பேசுவதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது. ஒவ்வொரு சிலம்பரசன் படத்துக்குப் பிரச்சினை. ‘வெந்து தணிந்தது காடு’ படத்தையும் அவ்வளவு கஷ்டப்பட்டுப் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறோம்.

ஒரு நடிகருக்கும், தயாரிப்பாளருக்கும் பிரச்சினை இருக்கும் போது பஞ்சாயத்து கூட்டப்படுகிறது. அதற்கு செல்வமணி சார் ஏன் வந்தார் என்று புரியவில்லை. பெப்சியில் ஏதேனும் பிரச்சினை என்றால் செல்வமணி சார் வருவது நியாயம். அவரே தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்னை அடியாள் மாதிரி பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லியிருக்கிறார் செல்வமணி சார். ஒரு வேளை பஞ்சாயத்து பேசி தீர்க்கப்படவில்லை என்றால், படத்துக்கு பெப்சி ஆட்களை அனுப்பக் கூடாது என்று சொல்வதற்காக அவரை வரவைத்துள்ளார்கள். தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கம் என்று தொடங்கியதே இவர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்துக் கொண்டே இருப்பதால் தான். தயாரிப்பாளர்களுக்கு நன்மை செய்வதற்காக மட்டுமே இதை உருவாக்கினோம்.

என்ன தைரியத்தில் செய்கிறார்கள் என்று கேட்டால், முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் எங்களுடைய பாக்கெட்டில் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், இப்படியொரு விஷயத்துக்கு முதல்வர் ஸ்டாலின் துணைப்போக மாட்டார் என்று சொல்வேன். ஏனென்றால், திமுக கட்சிக்காக என்னுடைய கணவர் எப்படியெல்லாம் பாடுபட்டு இருக்கிறார் என்பது அவருக்கு நன்றாக தெரியும்.
திமுக கட்சிக்காக பல்வேறு மேடைகளில் பேசியிருக்கிறார். காலை 5 மணி வரை எல்லாம் பேசுவார். ஒரு கட்டத்தில் தொண்டையிலிருந்து ரத்தமாக வரும். அதெல்லாம் பொருட்படுத்தாமல் போய் பேசுபவர் என் கணவர். அதிமுக ஆட்சியில் கருணாநிதி ஐயாவை கைது செய்தார்கள். அப்போது நான் போய் ஜெயிலை உடைத்து அவரை கூட்டுட்டு வருவேன் என்று சென்றவர் என் கணவர். அந்த அளவுக்கு திமுக கட்சிக்காக பாடுபட்டுள்ளார். திமுக கட்சிக்காக எந்தவொரு பிரதிபலனும் பாராமல் கடுமையாக உழைத்துள்ளோம்.

ஒரு காலமும் சிலம்பரசனின் படத்தை நிறுத்தவதற்கோ, ரெட் போடுவதற்கோ முதல்வர் ஸ்டாலின் துணையாக இருக்க மாட்டார். ஆனால், அவருடைய பெயரைத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இது தொடர்ந்தால் முதல்வர் ஸ்டாலினை சந்திப்பேன், பாரத பிரதமர் மோடி ஐயாவையும் போய் சந்திப்பேன்”
இவ்வாறு உஷா ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

Related posts