ஷங்கர் படத்தின் நாயகி ஆகும் அஞ்சலி?

ஷங்கர் இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகியாக அஞ்சலி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது படப்பிடிப்பு தொடங்குவதற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் படப்பிடிப்பை முழுக்க அரங்குகளிலேயே முடிக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.
தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் நாயகனாக ராம்சரண் நடிக்கவுள்ளார். இந்தப் படத்துக்கான கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். இதில் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார் ராம்சரண்.
ஒரு நாயகியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது. தற்போது மற்றொரு நாயகிக்கு சில நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. அதில் இறுதியாக அஞ்சலி நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இதனை அடுத்த வாரம் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘ஆர்சி15’ என அழைத்து வருகிறது படக்குழு. இதற்கு இசையமைப்பாளராக தமன் பணிபுரிந்து வருகிறார். விரைவில் ராம்சரணுடன் நடிக்கவுள்ள இதர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Related posts