கொரோனா 3 வது அலை ஆகஸ்டில் தொடங்கும்

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஆகஸ்டில் தொடங்கும் ஒரு நாளைக்கு 1 லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில் மூத்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் சாத்தியக்கூறு குறித்து இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில் லண்டனின் இம்பீரியல் கல்லூரியின் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்துடன் இணைந்து ஒரு கணித ஆய்வை மேற்கொண்டது.

இந்த தகவல்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டு உள்ளது. மூன்றாவது அலை ஏற்படக்கூடிய நம்பத்தகுந்த ஆதாரங்களை அது கொடுத்துள்ளது. அதே சமயம் 3 -வது அலை இரண்டாவது அலை போல பெரியதாக இருக்க வாய்ப்பில்லை என்பதையும் ஆய்வு விளக்குகிறது.

கொரோனா மூன்றாவது அலை குறித்து இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில் தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்களின் பிரிவின் தலைவர் பேராசிரியர் சமிரன் பாண்டா கூறியதாவது:-

கொரோனா மூன்றாவது அலை ஆகஸ்ட் மாதம் தொடங்க வாய்ப்பு உள்ளது. அப்போது தினமும் கிட்டத்தட்ட 1 லட்சம் கொரோனா பாதிப்புகள் உறுதிபடுத்தப்படலாம்.

தற்போதைய சூழ்நிலையில், வைரஸ் மேலும் பரவும் தன்மைக்கு வழிவகுக்காவிட்டால், நிலைமை கொரோனா முதல் அலைக்கு ஒத்ததாக இருக்கும்.வைரஸ் மேலும் மாற்றம் அடைந்தால் நிலைமை மோசமாக இருக்கும்.

இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில் மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆகியவற்றால் செய்யப்பட்ட கணித கணிப்பில் குறைந்த தடுப்பூசி விகிதங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது கொரோனா பாதிப்பில் அதிக எழுச்சிக்கு வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.இருப்பினும், இது இரண்டாவது அலை போல கடுமையானதாக இருக்காது.

கூட்டம் கூடுவதை தவிர்ப்பது, முககவசம் அணிவது போன்ற மருந்தியல் அல்லாத தலையீடுகள் நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த உதவும்.தற்போதைய தடுப்பூசி விகிதம் குறைவாக உள்ளது. ஸ்மார்ட் தடுப்பூசி திட்டம் இருக்க வேண்டும் என்று நான் ஒப்புக்கொள்கிறேன் என கூறினார்.

Related posts