பாலசுந்தரத்தின் படுகொலைக்கு நீதி கோரிய 16 பேர் கைது!

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் அவரது மெய்பாதுகாவலரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவருக்கு நீதி கோரி அவரது தாய் தந்தையர் உட்பட பொதுமக்கள் கவனயீர்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட பஸ் வண்டியில் நகருக்கு வந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 16 பேரை இன்று (07) பகல் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் 21 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவர் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடாத்தியதில் 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் எனபவரே உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிசூட்டு சம்பவம் தொடர்பாக அமைச்சரின் மெய்பாதுகாவலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்தவரின் தந்தையார் தாயார் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து நீதி கோரி காந்தி பூங்காவிற்கு முன்னால் கவனயீர்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு பஸ்வண்டி ஒன்றில் வந்திருந்ததுடன் அங்கு இளைஞர்களும் ஒன்றிணைந்து இருந்தனர்.

இதனை அடுத்து அந்த பகுதிக்கு பொலிஸார், புலனாய்வு பிரிவினர், இராணுவத்தினர் குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவந்தவர்களை அங்கிருந்து எச்சரித்து எந்த விதமான ஆர்ப்பாட்டங்களே ஒன்று கூடலையே செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்திருப்பதாக தெரிவித்து அவர்களை திருப்பி அனுப்பினர்.

அதேவேளை, பஸ்வண்டியில் வந்தவர்கள் அங்கிருந்து விலகி சென்ற நிலையில் அவர்களை பொலிஸார் பின் தொடர்ந்து அந்த பஸ் வண்டியில் உள்ளவர்களுடன் பஸ் வண்டியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கு தடுத்து வைத்து அதில் இருந்த துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவரின் தந்தை தாயார் உட்பட 16 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் பொலிஸ் நிலையத்துக்கு ஊடகவியலாளர் செல்வதற்கு பொலிஸார் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் இதில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையான அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts