பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் காலமானார்

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் காலமானார். அவருக்கு வயது 98.

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். மும்பையின் கர் பகுதியில் இருக்கும் ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவருக்கு 98 வயதானதால், வயது மூப்பின் காரணமாக உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திலீப் குமார் இன்று காலமானார்.

இந்தியத் திரையுலகின் மகத்தான நடிகர்களில் ஒருவரான திலீப் குமார், 1994-ல் தாதாசாகேப் பால்கே விருதை வென்றார். மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளை அதிகமுறை வென்றுள்ளார். 1944-ல் நடிகராக அறிமுகமாகி, 50 ஆண்டுகளில் 65 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 1998-ல் நடித்தார்.

Related posts