ராம்சரண் பட நாயகியாக கியாரா அத்வானி

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. மேக்கப் பிரச்சினை, கமலுக்கு அறுவை சிகிச்சை, படப்பிடிப்பில் விபத்து, கரோனா அச்சுறுத்தல் எனத் தொடர்ச்சியாகப் பல்வேறு தடைகளால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், தில் ராஜு தயாரிப்பில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஷங்கர். இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் நாயகியாக ஆலியா பட் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
ஆனால், இதன் நாயகியாக கியாரா அத்வானி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக, ராம்சரண் – கியாரா அத்வானி ஜோடி ‘விநய விதய ராமா’ படத்தில் இணைந்து நடித்துள்ளது. அதற்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் இணைந்து நடிக்கவுள்ளது.
‘இந்தியன் 2’ படத்தை முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் மற்ற படங்களை இயக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது லைகா நிறுவனம். இதன் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். இதனை வைத்தே ராம்சரண் நடிக்கவுள்ள படத்தை ஷங்கர் திட்டமிடவுள்ளார்.
‘இந்தியன் 2’, ‘ராம்சரண் படம்’ ஆகியவற்றைத் தொடர்ந்து இந்தியில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ள படத்தையும் இயக்கவுள்ளார் ஷங்கர். இது தமிழில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘அந்நியன்’ படத்தின் ரீமேக் ஆகும்.

Related posts