திரையரங்குகளில் வெளியாகிறது பார்டர்

ஓடிடி வெளியீடு என்ற முடிவிலிருந்து மாறி, திரையரங்குகளில் வெளியாகவுள்ளது ‘பார்டர்’ திரைப்படம்.
‘குற்றம் 23’ படத்துக்குப் பின் அருண் விஜய் – அறிவழகன் மீண்டும் இணைந்து பணிபுரிந்துள்ள படம் ‘பார்டர்’. இதில் ரெஜினா, ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் அருண் விஜய்யுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இதன் வெளியீட்டு உரிமையை பிரபு திலக் கைப்பற்றியுள்ளார்.
சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. கரோனா முதல் அலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. தற்போது முழுப் படப்பிடிப்பையும் முடித்து, இறுதிக்கட்டப் பணிகளும் முடிவடைந்துவிட்டன.
தற்போது கரோனா இரண்டாவது அலை அச்சுறுத்தலால், முதலில் ‘பார்டர்’ படக்குழுவினர் ஓடிடி வெளியீட்டைத் தேர்வு செய்தனர். ஏனென்றால் திரையரங்குகள் எப்போது திறக்கும் என்பதே தெரியாமல் இருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியிருப்பதால் ஜூலை 2-வது வாரத்தில் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், ‘பார்டர்’ படக்குழுவினர் ஓடிடி வெளியீடு என்ற முடிவிலிருந்து மாறி திரையரங்க வெளியீட்டைத் தேர்வு செய்துள்ளனர். ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Related posts