நெல் உற்பத்தியின்போது மிகக் குறைந்தளவான விதை நெல்லை பயன்படுத்தி, வரிசைக் கிரமமாக வயலை விதைக்கும் இயந்திரம் ஒன்றை, அநுராதபுரம் ஹிதோகம களுவிலயைச் சேர்ந்த துஷார மெதமுல்ல என்ற இளைஞர், மிகக் குறைந்த செலவில் கண்டு பிடித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் கூறியதாவது.
மிகமிகக் குறைந்த செலவில் தன்னால் கண்டு பிடிக்கப்பட்ட இச்சிறிய இயந்திரத்தின் மூலம், எவ்வித எரிபொருள் செலவுமின்றி, வரிசைக் கிரமமாக விதை நெல்லை வீச முடிம். வயல் விதைக்கும் காலப்பகுதியில் மிகக் குறைந்த விதை நெல்லை மாத்திரம் பயன்படுத்தி வரிசையாக நெல்லை விசிறவும் இந்த இயந்திரம் உதவும். ஒரு ஏக்கர் பரப்பளவுடைய வயல் நிலத்துக்கு 45 கிலோ கிராம் விதை நெல்லை இந்த இயந்திரத்தால் விசிறமுடியும்.
முன்பு வயல் விதைக்கும் போது செலவாகும் கால நேரத்தை விட, இதை பாவிக்கும் போது மிகக்குறைந்த கால நேரமே விரயமாகும். நிலத்தை சரி செய்தபின் சேதன பசளையை பாவித்து வேளாண்மை செய்கையில் ஈடுபடும் போது, மிக இலகுவாக விதை நெல்லை நிலத்துக்கு இடும் வாய்ப்பும் அதிக விளைச்சலும் இதன் மூலம் கிடைக்கும். அத்துடன் இடைவெளியுடன் நெற் பயிர் வளர்வதால், நெற் பயிருடன் போட்டி போட்டு வளரும் ஏனைய களைகளை இலகுவாக அகற்றும் வாய்ப்பும் இதன் மூலம் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தனது தந்தை விதை நெல்லை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கும் ஒரு விவசாயி என்றும், இணையத்தினூடாகச் சென்று இது பற்றிய அறிவைப் பெற்று இதை தயாரித்ததாகவும் இதற்காக வெறும் ஐயாயிரம் ரூபா மாத்திரமே செலவானதாகவும் அவர் தெரிவித்தார்.
துவிச்சக்கர வண்டியின் சில்லுகள் இரண்டும், பிவிசி குழாய்,ரேசர்கள் இரண்டு மாத்திரமே இதற்காக தேவைப்பட்டதாகவும், தான் தயாரித்த இந்த புதிய சாதாரண இயந்திரத்தின் மூலம்,விவசாய திணைக்களம் நான்கு வரிசைகளில் நாட்டிய விதை நெல்லை ஒரு தடவைக்கு எட்டு வரிசையில் நட்டக் கூடியதாக இதை தயாரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.