கோடையில் ரிலீசாக இருந்த பெரிய படங்களை முடக்கிய கொரோனா

கொரோனா முதல் அலை ஊரடங்கு தளர்வில் மாஸ்டர், சுல்தான், கர்ணன் உள்ளிட்ட சில படங்கள் வெளிவந்தன.

கோப்ரா, டாக்டர், ராங்கி, மாநாடு, துக்ளக் தர்பார், மாமனிதன், நெற்றிக்கண், எம்.ஜி.ஆர் மகன், கோடியில் ஒருவன். லாபம், பார்டர், கடைசி விவசாயி போன்ற பெரிய படங்களின் படப்பிடிப்புகளை முடித்து கோடையில் திரைக்கு கொண்டு வர தயாராக வைத்து இருந்தனர். ஆனால் கொரோனா 2-வது அலை ஊரடங்கு நீடிப்பதால் அவை திரைக்கு வராமல் முடங்கி முதலீட்டுக்கான வட்டி அதிகமாவதாக தயாரிப்பாளர்கள் தவிப்பில் உள்ளனர். இவற்றில் சில படங்களை தியேட்டருக்கு பதிலாக ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. கோப்ரா படத்தில் விக்ரம் கதாநாயகனாகவும், ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாகவும் நடித்துள்ளனர். அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். ரஷ்யாவில் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன.

துக்ளக் தர்பார், மாமனிதன், லாபம், கடைசி விவசாயி படங்களில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். மாமனிதன் நீண்ட காலமாக முடங்கி உள்ளது. லாபம் படத்தை மறைந்த இயக்குனர் ஜனநாதன் இயக்கி உள்ளார். நாயகியாக சுருதிஹாசன் நடித்துள்ளார். கடைசி விவசாயி, துக்ளக் தர்பார் ஆகிய இரு படங்களையும் ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிக்கின்றனர். நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா பார்வையற்றவராக நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் மகன் படத்தில் சசிகுமாரும், கோடியில் ஒருவன் படத்தில் விஜய் ஆண்டனியும் நடித்துள்ளனர்.

Related posts