ராதா மோகனுக்குக் கடமைப்பட்டுள்ளேன்

இயக்குநர் ராதா மோகன் சாருக்குக் கடமைப்பட்டுள்ளேன் என்று கருணாகரன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
ராதா மோகன் இயக்கத்தில் வைபவ், வாணி போஜன். எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மலேஷியா டூ அம்னீஷியா’. இந்தப் படத்தின் மூலம் வைபவ் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார். ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் விமர்சகர்கள் மத்தியில் போதிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
மலேஷியா டூ அம்னீஷியா’ படத்தில் கருணாகரன் கதாபாத்திரத்துக்குப் பாராட்டும், வரவேற்பும் கிடைத்துள்ளது.
இந்நிலையில் கருணாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“இயக்குநர் ராதா மோகன் சாருடன் பணியாற்றுவது எப்போதும் ஒரு உன்னதமான அனுபவம். ‘உப்பு கருவாடு’ படத்தில் என்னை நாயகனாக அறிமுகப்படுத்திய அவருக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டு இருக்கிறேன். குடும்பத்தோடு சேர்ந்து பார்த்து மகிழக்கூடிய ஜனரஞ்சகமான படைப்புகள் தருவதில் அவருக்கு நிகர் அவரே.
‘மலேஷியா டூ அம்னீஷியா’ படத்தில் கூட அவரது கைவண்ணம் நிரவி இருக்கும். மன உளைச்சலில் இருக்கும் மக்களுக்கு இந்தப் படம் ஒரு பெரிய மாற்று மருந்தாக இருக்கும். இந்தப் படம் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படமாகும்.
வைபவ், வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர் சார், மயில் சாமி சார், ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய இந்த அனுபவம் மறக்க முடியாதது”.
இவ்வாறு கருணாகரன் தெரிவித்துள்ளார்.

Related posts