கொரோனா 2-வது அலைக்கு பிரதமர் மோடி தான் முழு பொறுப்பு

கொரோனா 2-வது அலைக்கு பிரதமர் மோடியே முழு பொறுப்பு என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

கொரோனா விவகாரத்தை மத்திய அரசு சரிவர கையாளவில்லை என்று துவக்கம் முதலே மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருபவர் ராகுல் காந்தி. இன்று காணொலி வாயிலாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக சாடினார்.

ராகுல் காந்தி கூறியதாவது:-கொரோனா 2-வது அலைக்கு முழு பொறுப்பு பிரதமர் மோடிதான். கொரோனாவை பற்றி பிரதமர் மோடி அறிந்து கொள்ளவில்லை. முதல் அலையின் போது யாருக்கும் தெரியாது. ஆனால், 2 -வது அலைக்கு பிரதமரே காரணம். பிரதமர் மோடி நிகழ்ச்சி மேனஜராக உள்ளார்.

எங்களுக்கு நிகழ்ச்சிகள் தேவையில்லை. உத்திகள் தான் தேவை. மொத்த மக்கள் தொகையில் வெறும் 3 சதவீதத்தினருக்கே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பிரேசிலில் 8 முதல் 9 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி உற்பத்தியின் தலைநகரமாக அவர்கள் இல்லை.

ஆனால், நாம் இருக்கிறோம். தடுப்பூசிகளை உற்பத்தி செய்கிறோம். தடுப்பூசி உத்திகளுக்கு தீர்வு காணாவிட்டால் இந்தியாவில் பல அலைகளாக கொரோனா தாக்கும். தடுப்பூசி மட்டுமே முழுமையான தீர்வாக இருக்கும். ஊரடங்கு, சமூக இடைவெளி ஆகியவை தற்காலிக தீர்வுகள் மட்டுமே. இந்தியாவின் கொரோனா உயிரிழப்பு விகிதம் உண்மையல்ல. மத்திய அரசு இந்த விவகாரத்தில் உண்மையை வெளியிட வேண்டும்” என்றார்.

Related posts