தொடரும் விஜய் பட வதந்திகள்

விஜய்யின் அடுத்த படம் தொடர்பாகத் தொடர்ச்சியாக வதந்திகள் பரவி வருகின்றன.
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். கரோனா 2-வது அலையின் தீவிரம் குறைந்தவுடன், சென்னையில் 2-ம் கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
இந்தப் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமுள்ளன. நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம், விஜய் நடிக்கும் 65-வது படமாகும். அதனைத் தொடர்ந்து 66-வது படத்தை லலித் குமார் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்றும், 67-வது படத்தை தில் ராஜூ தயாரிக்க, வம்சி இயக்கவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படங்கள் போக தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்களும் விஜய்யை வைத்துப் படங்கள் தயாரிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக விஜய் தரப்பில் விசாரித்தபோது, “எதுவுமே உண்மையில்லை. இன்னும் எதுவும் முடிவாகவில்லை. இப்போதைக்கு நெல்சன் இயக்கி வரும் படத்தில்தான் விஜய் கவனம் செலுத்தி வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு 50% தாண்டிய பிறகுதான், அடுத்த படம் குறித்து முடிவெடுப்பார்” என்று தெரிவித்தார்கள்.
இதனிடையே, தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநரான வம்சி சென்னைக்கு வந்து விஜய்யைச் சந்தித்துவிட்டுச் சென்றது உண்மைதான் எனவும், அவருடைய இயக்கத்தில் விஜய் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts