இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.4 லட்சம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா தொற்று வைரஸ் 2-வது அலையாக பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தொற்று பரவல் காரணமாக நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. தடுப்பூசி போடும் பணியும் விரைவு படுத்தப்பட்டு வருகிறது. இதன் பலனாக கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,40,842-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 2.65 லட்சம் பேர் ஒரே நாளில் குணம் அடைந்த நிலையில், 3,741- பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2.99 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 28 லட்சத்து 05 ஆயிரத்து 399- ஆக குறைந்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 19 கோடியே 50 லட்சத்தை தாண்டியுள்ளது.

Related posts