நல்லாட்சி அரசில் படுக்க பாய்கூட தராது CID யில்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்தி எங்களை அழிக்க முற்பட்டவர்கள் இன்று அதற்கு எதிராக பேசுவது வேடிக்கையாகவுள்ளதென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படுவர்கள் குறித்து எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை முன்வைப்பதுடன், திட்டமிட்டு கைதுசெய்யப்படுவதாக அரசாங்கத்தின் மீது சேறுபூசும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். நல்லாட்சி அரசாங்கம் அமையப்பெற்று பங்கரவாதத் தடைச்சட்டம் முதலின் என்மீதுதான் பாய்ந்தது. அதை மறந்துவிட்டு பேசுகின்றனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்தி எங்களை அழிக்க முற்பட்டவர்கள் இன்று அதனை பிழையென கூறுகின்றனர்.

என்னையும் 65 நாட்களுக்கும் அதிகமாக சி.ஐ.டியில் தடுத்து வைத்திருந்தனர். படுப்பதற்கு பாயைக்கூட கொடுக்காத நிலையில்தான் எங்களை நல்லாட்சி அரசாங்கம் பயன்படுத்தியிருந்தது. எமது தாய், தந்தை, உறவுகளை வீடுகளில் கட்டிவைத்து இந்தச் சட்டத்தை பயன்படுத்தியிருந்தனர். இவ்வாறு பயங்கரவாதத் தடைச்சட்டத்ததை பயன்படுத்தியவர்கள் இன்று அதுபற்றி பேசுவது வேடிக்கையாகவுள்ளது.

குறிப்பாக தமிழ் தேசியவாதிகள் இருந்த காலப்பகுதியில் என்ன செய்தனர். பங்கரவாதத் தடைச்சட்டத்தை ஒழிக்க தமிழ்த் தேசியவாதிகள் எடுத்த நடவடிக்கை என்னவென்ற கேள்வி மக்களிடம் உள்ளது. 60 வருடங்களாக அவர்கள் இதனை பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

நாம் சபையில் இல்லாத சந்தர்ப்பத்தில் எம்மை புலிகள், சிங்கங்கள், பறவைகள் எனக் கூறியிருந்த பல உறுப்பினர்களை பார்த்துள்ளேன். சாணக்கியனின் வயதும் எனது அரசியல் பொதுவாழ்வும் ஒன்றாகும். நாம் வன்முறை புலிகளாக இருக்கவில்லை. வன்முறையை கைவிட்டு விட்டு புலிகளிடமிருந்து பிரிந்து வந்தது இந்த உலகத்துக்கும் பாராளுமன்றத்தில் அனைவருக்கும் தெரிந்த விடயம். 30 வருடங்களாக கிழக்கில் நிலவிய வன்முறையான நிலைமை ஒழிக்கப்படாமல் போயிருந்தால் நீங்களும் இன்று பாராளுமன்றில் பேச முடியாத நிலையே இருந்திருக்கும் என்றார்.

சம்ஷ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Related posts