உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி

உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதில் தாமதம் நிலவுவதற்கு காரணம், தற்போதுள்ள சட்டத்தில் உள்ள குறைபாட்டை பயன்படுத்தி தப்பி செல்லாதிருப்பதற்காக குறைபாடுகளை களைவதற்காக முறையாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பான முழுமையற்ற விசாரணை காரணமாக சந்தேக நபர்கள் மீது வழக்குத் தொடர முடியவில்லை என்றும் சட்டமா அதிபர் தப்புல த லிவேரா அளித்த சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பாக அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையை வெளியிட்டு உரையாற்றினார்.

இந்த சம்பவம் தொடர்பாக 32 சந்தேக நபர்களுக்கு எதிராக 9 வழக்குகளை விரைவாக பதிவு செய்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள நௌபர் மௌலவி உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என்பதை அமெரிக்க FBI உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பல வெளிநாட்டவர்கள் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளதான தகவல்கள் தொடர்பாகவும் அமைச்சர் சரத் வீரசேகரவும் தெளிவுபடுத்தினார்.

இதற்கமைவாக இலங்கை வம்சாவளியான அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த லுக்மான் தாலிப் என்பவர் ஏற்கனவே கட்டார் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், 4 மாலைத்தீவு பிரஜைகள் இந்த பயங்கரவாதத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டிருப்பதற்கான தகவல்கள் இருப்பதாகவும் அமைச்சர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts