கதைகள் தேர்வில் நயன்தாரா புது முடிவு

நயன்தாரா இனிமேல் கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிப்பது இல்லை என்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடிப்பது என்றும் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ், சிம்பு, ஆர்யா, விஜய்சேதுபதி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நயன்தாரா நடித்துள்ளார்.

இடையிடையே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வந்தார். நயன்தாராவை முதன்மைப்படுத்தி வந்த அறம் படம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. கோலமாவு கோகிலா, டோரா, இமைக்கா நொடிகள், ஐரா ஆகிய படங்களும் நயன்தாராவை முதன்மைப்படுத்தியே வந்தன.

தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த, விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடிக்க முடிவு எடுத்து கதை கேட்டு வருகிறார். தற்போது நயன்தாரா கைவசம் உள்ள நெற்றிக்கண் படத்தில் அவருக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.

Related posts