இலங்கைக்கு எஸ்ட்ரா செனேகா வழங்க சாதகமான பதில்

இரண்டாவது டோஸ் வழங்குவதற்காக தேவையான ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ரா செனேகா தடுப்பூசிகளை பாதுகாக்க கோரியதற்கு இங்கிலாந்திலிருந்து சாதகமான பதில் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் பதிவாகும் அதிகளவிலான நோயாளிகள் மற்றும் இறப்பு காரணமாக, சீரம் நிறுவனத்தால் கொவிஷீல்ட் தடுப்பூசிகளை வழங்க முடியாத நிலையில் வேறு தரப்பிடமிருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள திட்டமிடுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒரு மில்லியன் டோஸ் கொவிஷீல்ட் தடுப்பூசிகளை வழங்குவதற்காக இங்கிலாந்திலிருந்து சாதகமான பதில் கிடைத்ததாகவும் தற்போது இரு அரசாங்கங்களுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை அமெரிக்காவிலிருந்து தேவையான அளவுகளை கோரியுள்ளதாகவும் மேலும் கொவிஷீல்ட்டின் முதல் டோஸைப் பெற்றவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி ஏற்றுவதற்கான அளவுகளை பெற்றுக்கொள்ள முடிந்தவரை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
அந்தந்த நாடுகளின் முகவர்களுடன் கலந்துரையாடுவதோடு மட்டுமல்லாமல், திறந்த சந்தைகளில் தேவையான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவும் அரசாங்கம் முயற்சி எடுத்துவருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts