நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி

தமிழகத்தில் கொரோனாவில் இரண்டாவது அலை காரணமாக தொற்று பரவல் அதிகரிப்பால் கடும் மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியையும் அரசு சந்தித்து வருகிறது. இதற்கு பொதுமக்கள், வாய்ப்புள்ளவர்கள் தாமாக முன்வந்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
முதல்-அமைச்சர் வைத்த கோரிக்கையை ஏற்று கோடிக்கணக்கான ரூபாய் முதல், தங்களால் இயன்ற நிதி வரை கோடீஸ்வரர்கள், பெரும் நிறுவனங்கள், அரசியல், சினிமா, வெளிநாடுவாழ் தமிழர்கள், ஆசிரியர் அமைப்பினர், கடைநிலை ஊழியர்கள், குழந்தைகள் என பலதரப்பட்டவர்களும் நிதி அளித்து வருகின்றனர். கவர்னர் பன்வாரிலால் புரோகித் ரூ.1 கோடியும், தனது ஒரு மாத ஊதியத்தையும் வழங்கினார். அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி எம்.பி., எம்எல்ஏக்கள் தொகுதி நிதியை வழங்குவதாக அறிவித்திருந்தன.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தார். தனது பங்களிப்பாக கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சத்தை முதல்-அமைச்சரிடம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “கொரோனா எனும் உயிர்க்கொல்லி நோயை ஒழிக்க தமிழக அரசாங்கம் கொண்டுவந்த கட்டுப்பாடுகளைப் பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும். அப்போதுதான் கொரோனா எனும் நோயை ஒழிக்க முடியும். இது பொதுமக்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள்” என்று அவர் தெரிவித்தார்.

—-

முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

Related posts