சல்மான் கான் சகோதரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் ராதே யுவர் மோஸ்ட் வான்டட் பாய். இந்த படம் பற்றிய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் இன்று கலந்து கொண்டார்.

அவர் பேசும்பொழுது, தனது இரு சகோதரிகளான அர்பிதா கான் சர்மா மற்றும் அல்வைரா கான் அக்னிஹோத்ரி ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

சமீபத்தில் ராதே திரைப்பட தயாரிப்பாளர்களான சல்மான் கான் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் அரசு சாரா அமைப்பு ஒன்றுடன் இணைந்து உறுதிமொழி ஒன்று அளித்தனர். தங்களுடைய வருவாயில் ஒரு பங்கு கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் என தெரிவித்தனர்.

நடிகர் சல்மான் கான், மராட்டியத்தின் மும்பை நகரில் 5 ஆயிரம் முன்கள பணியாளர்களுக்கு தொற்று காலத்தில் உதவிடும் நோக்கில், கடந்த ஏப்ரல் இறுதியில் கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதேபோன்று, கொரோனா பாதிப்புகளால் தொடர்ந்து வேலையின்றி உள்ள இந்தி திரையுலகை சேர்ந்த 25 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளித்து அவர்களுக்கு உதவவும் முடிவு செய்து உள்ளார்.

இதன்படி, தினக்கூலி அடிப்படையில் சம்பளம் பெறும் 25 ஆயிரம் தொழிலாளர்களின் கணக்குகளில் தலா ரூ.1,500 செலுத்த இருக்கிறார். இதன்படி திரை தொழிலாளர்கள் கூட்டமைப்பில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் இந்த நிதியுதவியை பெற முடியும்.

Related posts