இயக்குநர் வசந்த பாலனுக்கு கரோனா தொற்று உறுதி

இயக்குநர் வசந்த பாலனுக்கு கரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கரோனா 2-வது அலையில் தீவிரம் அதிகமாகியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. பொதுமக்கள் அனைவருமே அரசுக்கு ஒத்துழைக்கும்படி தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே சில திரையுலக பிரபலங்களுக்கும் கரோனா தொற்று உறுதியாகி வருகிறது. தற்போது இயக்குநர் வசந்த பாலனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இயக்குநர் வசந்த பாலன் கூறியிருப்பதாவது:
“அன்புள்ள நண்பர்களுக்கு! நான் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.ஆதலால் பலருடைய தொலைபேசி அழைப்பை எடுக்க இயலமுடியவில்லை.
என் மீது பேரன்பு கொண்ட நண்பர்கள், மருத்துவர்கள், உறவினர்கள் சூழ இருக்கிறேன் என்பதே மனதிற்குள் ஆயிரம் யானை பலம் கூடி வருகிறது. ஈராறு கால்கொண்டெழும் புரவியாய் மீண்டும் எழுந்து வருவேன்”
இவ்வாறு வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.
தற்போது அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் வசந்த பாலன். முன்னதாக ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘ஜெயில்’ படத்தையும் இயக்கி முடித்துள்ளார். அந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

Related posts