இணையத்தில் பொய்யான செய்திகளை பரப்புவதற்கு எதிராக சட்டம்

இணையத்தில் பொய்யான மற்றும் பிழையாக வழிநடத்தும் செய்திகளை பரவுவதைத் தடுக்கும் சட்டமூலத்தை தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று (19) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த தீர்மானம் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக அமைச்சரவை இணை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (20) அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இணையத்தளங்கள் வாயிலாக பொய்யான தகவல்களை பரப்புவதன் மூலம் மோசமான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தப்படுவதுடன் குறித்த நிலைமைகள் சமூகத்தை பிளவுபடுத்துவதற்கும், வெறுப்புணர்வை பரப்புவதற்கும் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை பலவீனப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதால், இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பல நாடுகள் சட்டங்களை வகுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இணையத்தளங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் பொய் பிரச்சாரங்களால் ஏற்படும் பாதிப்புக்களில் சமூக பாதுகாப்புக்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் பிரஜைகளுக்கும் சிவில் சமூகத்தவர்களுக்கும் சரியான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்புக்களை வழங்குவதற்கும் நடடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக, குறித்த பணிக்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி அமைச்சரும் வெகுசன ஊடக அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1. மாநகர பல்கலைக்கழகத்தை நிறுவுதல்
தொழில் சந்தையில் அதிக கேள்வியுள்ள தொழில்களின் தரத்தை அதிகரிப்பதற்காக உயரிய தொழில் அங்கீகாரம் மற்றும் திறன்களுடன் கூடிய உலகளாவிய ரீதியில் போட்டித்தன்மையான தொழில்வாண்மையாளர்களை உருவாக்குவதன் சமகாலத் தேவை கண்டறியப்பட்டுள்ளது. எமது நாட்டில் உயர்தரம் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெறும் மாணவர்களில் பல்கலைக்கழகக் கல்விக்கான வாய்ப்பு 20% வீதமானவர்களுக்கே கிடைப்பதுடன், அவ்வாறான வாய்ப்புக்கள் கிடைக்காதவர்களை கைத்தொழில் மற்றும் தொழிற்பயிற்சியில் ஈடுபடுத்துவது குறிப்பிடத்தக்களவில் இடம்பெறவில்லை. அதனால், குறித்த மாவட்டங்களில் உற்பத்தித் துறைகளுக்கு தேவையான திறன்களை மேம்படுத்தி தொழில் வாய்ப்புக்களுக்குப் பொருத்தமான பட்டங்களை வழங்கும் உயர்கல்வி நிறுவனமாக மாநகர பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காகவும், அதற்குத் தேவையான சட்டரீதியான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் கொரிய குடியரசின் சன்கின்க்வான் பல்கலைக்கழகத்திற்கும் (Sungkyunkwan University, Korea) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்
நோய் எதிர்ப்பியல் மற்றும் நுண்ணுயிரியல் விஞ்ஞானம் தொடர்பான ஆரம்ப பட்டப்படிப்பை விருத்தி செய்வதில் ஒத்துழைப்பை அதிகரித்தல், கற்கை நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பித்தலுக்காக ஒத்துழைத்தல் மற்றும் மூன்றாம்நிலை மற்றும் கனிஷ்டநிலை மாணவர்களுக்காக புதிய ஆய்வு நிகழ்ச்சிகளைத் திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல் மூலம் இருதரப்பினருடன் நோய் எதிர்ப்பியல் மற்றும் நுண்ணுயிரியல் விஞ்ஞான துறைகளில் கற்கை மற்றும் கலாசார பரிமாற்றங்களுக்காக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் கொரிய குடியரசின் சன்கின்க்வான் பல்கலைக்கழகத்திற்கும் (Sungkyunkwan University, Korea) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. ஹார்டி தொழிநுட்பவியல் நிறுவனத்தை மீளமைத்தல்
1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற அபிவிருத்தி தேவைகளுக்கு ஏற்புடைய வகையில் இலங்கையின் முதலாவது பல்நோக்கு நீர்த்தேக்கக் கருத்திட்டமான கல்ஓயா அபிவிருத்தி கருத்திட்டத்தை நோக்கமாகக் கொண்டு தொழிநுட்ப உத்தியோகத்தர்களுக்கு முறைசார் பொறியியல் அறிவைப் பெற்றுக்கொடுப்பதற்காக தொழிநுட்பவியல் பயிற்சி நிறுவனமாக ஆரம்பத்தில் ஹார்டி தொழிநுட்பவியல் நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறித்த நிறுவனம் மற்றும் விடயதானங்கள் பல்வேறு வகையில் மாற்றமடைந்துள்ளதுடன், தற்போது குறித்த நிறுவனம் உயர்கல்வி வாய்ப்புக் கிட்டாத தகுதியுடைய மாணவர்களுக்கு மாற்று உயர்கல்வி வாய்ப்புக்களை வழங்குவதற்காக தேசிய டிப்ளோமா (NVQ-5) மட்டத்திலானதும் உயர்கல்வி தேசிய டிப்ளோமா (NVQ-6) மட்டத்திலான பயிற்சிநெறியை வழங்கி ஹார்டி தொழிநுட்பவியல் கல்லூரியாகவும், குறித்த நிறுவனத்தால் இதற்கு முன்னர் நடாத்தப்பட்ட NDT விவசாயப் பாடநெறி, இலங்கை உயர் தொழிநுட்ப கற்கை நிறுவனம் (SLIATE) இன் கீழ் அமைக்கப்பட்ட ஹார்டி உயர் தொழிநுட்ப நிறுவனம் (HATIமூலமும், இரண்டு நிறுவனங்களாக வௌ;வேறாக நடாத்தப்பட்டு வருகின்றன. சமகால அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டத்திற்கமைய பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கும் பொருளாதார விரிவாக்கத்திற்கு ஏதுவான தொழிநுட்ப அறிவுடன்கூடிய தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதற்காக இந்நிறுவனத்தின் கட்டமைப்பு மற்றும் பாடநெறி உள்ளடக்கங்களை மாற்றியமைக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளதால் குறித்த நிறுவனங்கள் இரண்டையும் ஒருங்கிணைத்து ‘ஹார்டி தொழிநுட்பவியல் நிறுவனம்’ (HIT) எனும் பெயரில் சுயாதீன நிறுவனமாக தாபிப்பதற்கும், அதற்காக குறித்த சட்டத் திருத்தத்தை மேற்கொள்வதற்கும் கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. ஜப்பான் நாட்டின் கடனுதவியின் கீழ் இலங்கையில் மின்னணு அலை தொலைகாட்சி ஒளிபரப்பு வெளியீட்டுக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
மின்னணு அலை தொலைகாட்சி ஒளிபரப்பு (Analog) முறைமையிலிருந்து எண்முறை (Digital) பொறிமுறைக்கு மாற்றமடைந்து வருவதுடன், இந்த உலகளாவிய போக்குக்கு இசைவாக்கமடைதல் முக்கியமான விடயமாக உள்ளது. அதற்கமைய மின்னணு அலை தொலைகாட்சி ஒளிபரப்பு முறையிலிருந்து எண்முறை பொறிமுறைக்கு பரிமாற்றுவதற்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் தேவையான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தாலும், குறித்த தீர்மானங்கள் இதுவரை நடைமுறைபடுத்தப்படவில்லை. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தால் (JICA) மேற்கொள்ளப்பட்ட சாத்தியவளக் கற்கையின் பின்னர் இலங்கைக்கு பொருத்தமான வகையில் ISDB-T தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எண்முறை (Digital) தொழிநுட்பத்தை பின்பற்றுவதன் மூலம் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் அலைவரிசை அதிர்வெண் வீச்சின் (Frequency spectrum) ஒருபகுதி கிராமிய பிரதேசங்களின் இணையத்தள வசதிகளை அதிகரிப்பதற்காக கம்பியில்லா தந்திச் சேவையை பயன்படுத்துவதற்கான இயலுமையும் உண்டு. அதற்கமைய புதிய தொழிநுட்பத்தை பயன்படுத்தி இலங்கையில் மின்னணு அலை தொலைகாட்சி ஒளிபரப்பு முறையை எண்முறையாக (Digital) மாற்றியமைக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தொழிநுட்ப அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதியும், வெகுசன ஊடக அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. ‘இளைஞர் மையம்’ – அதிக செல்வாக்குக் கொண்ட இளைஞர் சனசமூக நிலையத்தை நிறுவும் கருத்திட்டம்
இலங்கையில் இளைஞர் சமூகம் தமது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் பயனுள்ள சமூக வாழ்க்கையை கழிப்பதற்காக, அவர்கள் முகங்கொடுக்கின்ற கல்வி ரீதியான, சுகாதார ரீதியான, சிவில் மற்றும் அரசியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல் மற்றும் உடன்பாடுகள் மூலம் தீர்வு காண்பதற்காக தற்போது காணப்படுகின்ற வசதிகள் போதுமானதாக இல்லை. குறிப்பாக அவ்வாறான நடவடிக்கைகளுக்காக ஒன்று சேர்வதற்கு, கலந்துரையாடுவதற்கு பிரதேச மட்டத்திலான வாய்ப்புக்கள் மற்றும் நிலையங்கள் மிகவும் குறைவாகவுள்ளது. குறித்த நிலைமைக்கு தீர்வாக இளைஞர் சமூகத்திற்கு அவர்களுக்குப் பழக்கப்பட்ட சூழலில் ஒன்று சேர்ந்து அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு நேரத்தைப் பயனுள்ளாதாகப் பயன்படுத்துவதற்காக பொருத்தமான இடத்தை நிர்மாணித்தல் உகந்ததென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்காக மாவட்ட அல்லது பிரதேச மட்டத்தில் போதுமான இடவசதி காணப்படும் பயன்படுத்தப்படாத அரச பாடசாலை அல்லது வேறு கட்டிடங்களை அடையாளங்கண்டு பல்வேறு வாய்ப்புக்கள் மற்றும் செயற்பாடுகளை உருவாக்கும் அதிக செல்வாக்குக் கொண்ட இளைஞர் சனசமூக நிலையத்தை நிறுவும் கருத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையங்களில் இளைஞர் அபிவிருத்தி வலயம், இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு வலயம் பொருளாதார வலயம் மற்றும் பசுமை வலயம் என 04 விடயங்கள் மூலமாக செயற்பாடுகளுக்கு வசதியளித்தல் வழங்கி, அரச மற்றும் தனியார் இணைந்த கருத்திட்டமாக நடைமுறைப்படுத்தி, 05 வருடங்களில் இலங்கையின் அனைத்து பிரதேச செயலகங்களிலும் இளைஞர் சனசமூக நிலையத்தை அமைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, படிமுறை படிமுறையாக குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், அதன் முதலாம் கட்டமாக அனைத்து மாவட்டத்தையும் உள்ளடக்கி குறித்த நிலையங்கள் 25 இனை நிறுவுவதற்காக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. பாடசாலை சீருடை துணி கொள்வனவு செய்தல் – 2022
2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடை துணி 2021 ஆம் ஆண்டின் இறுதி பாடசாலை தவணை பூர்த்தியாவதற்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளூர் உற்பத்தியாளர்களை வலுவூட்டி பாடசாலை சீருடை துணியை உள்ளுர் உற்பத்தியாளர்களிடம் கொள்வனவு செய்ய வேண்டுமென இதற்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கமைய நடவடிக்கைகளை மேற்கொண்டு கைத்தொழில் அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட உள்ளூர் துணி உற்பத்தியாளர்களிடம் விலைமனு கோரப்பட்டு பொருத்தமான விநியோகத்தர்களை தெரிவுசெய்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. பௌத்த வெளியீடுகளுக்கான ஒழுங்குபடுத்தும் சட்டம் வகுத்தல்
அரசியலமைப்பின் ii ஆம் அத்தியாயத்தின் 9 ஆம் பிரிவில் உள்ளவாறு பௌத்த சமயத்திற்கு முதன்மைத்தானத்தை வழங்கி, பாதுகாத்து மேம்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும். புத்த தர்மம் மற்றும் பௌத்த சம்பிரதாயங்களை விகாரமாக்கி பல்வேறு நூல்கள், வெளியீடுகள், சுருக்க இறுவெட்டுக்கள் மற்றும் பல்வேறு ஆக்கங்கள் உருவாக்கப்படுகின்றமை தெரியவந்துள்ளது. அதனால், அவ்வாறான ஆக்கங்களை ஒழுங்குபடுத்தும் ஏற்பாடுகள் உள்ளடங்கிய சட்டத்தை வகுத்தல் உகந்ததென அவதானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பௌத்த வெளியீடுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்கவதற்காக புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. 2003 ஆம் ஆண்டு 3 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்தை திருத்தம் செய்தல்
2003 ஆம் ஆண்டு 3 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்தில் குறிப்பிடப்பட்ட கடன் மற்றும் பிணைகள் தொடர்பான ஒழுங்குவிதிகளை திருத்தம் செய்வதற்காக சட்டமூலத்தை தயாரிப்பதற்கு 2020 திசெம்பர் மாதம் 21 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய சட்ட வரைஞரால் குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்;டுள்ளதுடன், அதற்காக சட்டமா அதிபரின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கும் நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. பால் உற்பத்தி தொழில்முயற்சியாளர் சங்கங்களைப் பதிவு செய்யும் சட்டமூலம் தயாரித்தல்
பால் உற்பத்தியில் ஈடுபடும் தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டுவதற்காக மாவட்டம் மற்றும் மாகாண மட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பால் உற்பத்தி தொழில் முயற்சியாளர் சங்கங்கள் இயங்கி வந்தாலும் அனைத்து பால் உற்பத்தி தொழில்முயற்சியாளர் சங்கங்களை ஒன்று திரட்டிப் அரச அங்கீகாரத்துடன் இயங்கும் பொதுவான அமைப்பாக இயங்குவதில்லை. அதனால், பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அவ்வாறான பொது அமைப்பின் கீழ் பிரதேச, மாவட்ட, மாகாண மற்றும் அகில இலங்கை மட்டத்திலான ஒரு சட்டரீதியான கட்டமைப்பின் கீழ் பால் உற்பத்தி தொழில்முயற்சியாளர்கள் சங்கத்தைப் பதிவு செய்வதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பணிகளுக்காக பால் உற்பத்தி தொழில் முயற்சியாளர் சங்கங்களைப் பதிவு செய்யும் சட்டமூலத்தை தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக கமத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பணிகளை சட்ட வரையறைக்கமைய தாபித்தல்
அமைச்சரவை முடிவுக்கமைய 2010 ஆம் ஆண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மனிதவலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்களம் நிறுவப்பட்டுள்ளது. தேசிய மனிதவலு மற்றும் வேலை வாய்ப்பு கொள்கையை தயாரித்து நடைமுறைப்படுத்தல், தொழில் உருவாக்கம் மற்றும் மேம்பாடு, தொழில் வழிகாட்டல்களுக்கான பணிகள், உழைப்பு சந்தையின் தகவல்களைத் திரட்டல், பகுப்பாய்வு செய்தல், விநியோகித்தல் மற்றும் தொழில் வீடு மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் போன்றன திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் நாட்டின் தொழிலின்மையை குறைத்தல், வேலைவாய்ப்பின்மையை குறைத்தல், மனிதவலுவை எதிர்கால போக்குகளுக்கமைய வடிவமைத்தல் மற்றும் முகாமைத்துவப்படுத்த போன்ற நோக்கங்களை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த பணிகளை மேற்கொள்ளும் போது முறையான சட்டரீதியான கட்டமைப்பு இருப்பதன் அவசியம் கண்டறியப்பட்டுள்ளதுடன், அதனை பாராளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவுவது பொருத்தமானதெனவும் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய மனிதவலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்களத்தின் பணிகளை சட்ட வரையறைக்கமைய நிறுவுவதற்காகவும், அதற்கான ஏற்பாடுகள் உள்ளடங்கலாக சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts