முத்தையா இயக்கத்தில் கார்த்தி: 2டி நிறுவனம் தயாரிப்பு

மீண்டும் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். இப்படத்தை 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமி மேனன், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கொம்பன்’. 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
அதற்குப் பிறகு மீண்டும் முத்தையா – கார்த்தி கூட்டணி இணைவது குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால், முன்பு ஒப்புக்கொண்ட படங்களால், இந்தக் கூட்டணி இணைவது தள்ளிக்கொண்டே வந்தது. தற்போது இருவருமே மீண்டும் இணைந்து பணிபுரிவது உறுதியாகியுள்ளது.
சூர்யாவின் 2டி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தின் கதை முடிவாகி, திரைக்கதை அமைக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறார் முத்தையா.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி. அந்தப் படத்தை முடித்துவிட்டு, மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படம் மற்றும் முத்தையா இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவற்றில் மாறி மாறி நடிக்க முடிவு செய்துள்ளார் கார்த்தி.
முத்தையாவின் முந்தைய படங்களைப் போல் இந்தப் படமும் முழுக்க கிராமத்துப் பின்னணியிலேயே உருவாகிறது.

Related posts