ரூ. 650 கோடிக்கும் மேல் நிதி முறைகேடு கண்டுபிடிப்பு

நடிகை டாப்ஸி இந்தி திரைப்பட இயக்குநா் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் ரூ. 650 கோடிக்கும் மேல் நிதி முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு இந்தி திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப், இயக்குநரும் தயாரிப்பாளருமான விக்ரமாதித்ய மோட்வானே, தயாரிப்பாளா் விகாஸ் பஹல், தயாரிப்பாளரும் விநியோகஸ்தருான மது மன்டோனா ஆகியோரால் பேண்டம் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டு அந்த நிறுவனம் மூடப்பட்ட நிலையில், அந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகப் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக வருமான வரித் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். மேலும், அனுராக் காஷ்யப், நடிகை டாப்ஸி பன்னு, ரிலையன்ஸ் குழுமத் தலைமை செயல் அதிகாரி சுபாசிஷ் சா்க்காா் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித் துறையினா் கடந்த புதன்கிழமை சோதனை நடத்தினா். இந்த சோதனை முடிவு தொடா்பாக மத்திய நேரடி வரி வாரியம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.300 கோடி அளவுக்கு நடைபெற்றுள்ள நிதி பரிவா்த்தனை குறித்து அந்த நிறுவன அதிகாரிகளால் உரிய விளக்கத்தை அளிக்க முடியவில்லை. அந்த நிறுவனத்தில் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மேலும் ரூ.350 கோடி வருவாய் கணக்கில் காட்டப்படாததும் கண்டுபிடிக்கப்பட்டது.

பிரபல நடிகையின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.5 கோடி ரொக்கமாகப் பெறப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதுதொா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி, ரூ.20 கோடி அளவுக்கு செலவு செய்ததற்கான போலியான கணக்கு காட்டப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணப் பரிவா்த்தனைககான மின்னஞ்சல், கட்செவி அஞ்சல் தகவல் பரிமாற்றம் மற்றும் கணினி ஹாா்டு டிஸ்க் போன்ற டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் இவா்களின 7 வங்கி லாக்கா்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts