3 கட்சிகளுக்கு மாறியது ஏன்? நடிகை குஷ்பு விளக்கம்.

நடிகை குஷ்பு சினிமா, அரசியல் வாழ்க்கை குறித்து அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி:- உங்கள் வாழ்க்கை பற்றி?

பதில்:- நான் விதியை பலமாக நம்புகிறேன். விதிப்படியே வாழ்க்கை அமைகிறது. மும்பையில் பிறந்த நான் மாற்று மதத்தவரை மணந்து சென்னையில் செட்டில் ஆவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. எத்தனை சம்பிரதாயங்கள் இருந்தாலும் மனிதர்களுக்கு மனிதாபிமானம், நேசிக்கும் மனது இருக்க வேண்டும்.

கேள்வி:- உங்களை பற்றி அடிக்கடி சர்ச்சைகள் வருகிறதே?

பதில்:- தைரியமாக உண்மையை சொல்வதால் சர்ச்சைகள் வருகிறது. சிலர், சமூகத்தில் ஒரு பெண் புத்திசாலியாக இருக்கக்கூடாது. சினிமா துறையை சேர்ந்தவள் என்றால் சுத்தமாக அறிவு கிடையாது, சமூகத்தில் ஏதாவது பிரச்சினை இருந்தால் வாயை திறக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். அவர்கள் எண்ணங்களுக்கு விரோதமாக எனது நடவடிக்கை இருப்பதால் பிரச்சினை வருகிறது. இந்திய பிரஜையாக எனக்கு இருக்கும் உரிமைப்படி நான் தைரியமாக பேசுகிறேன். அதனால்தான் விவாதங்கள் வருகிறது. உள்ளதை உள்ளபடி பேசுவதுதான் எனக்குள்ள மைனஸ். அது இங்கு சரிப்பட்டு வராது. ஆனாலும் அதை என்னால் மாற்றிக்கொள்ள முடியாது.

கேள்வி:- கட்சி மாறியது குறித்து?

பதில்:- நீங்கள் மூன்று கட்சிக்கு ஏன் மாறினீர்கள் என்று எல்லோரும் கேட்கிறார்கள். எங்கு கவுரவம் இல்லையோ அங்கு இருக்காதே ஓடிப்போய் விடு என்று எனது அம்மா சொல்லி இருக்கிறார். கவுரவம் இல்லாத இடத்தில் என்னால் இருக்க முடியாது. தி.மு.க.வில் இருந்து எதற்கு வெளியே வந்தேன் என்பது கருணாநிதிக்கு மட்டும்தான் தெரியும். அங்கிருந்து ஈகோ பிரச்சினையால் வெளியே வந்தேன். காங்கிரசிலும் அதுதான் நடந்தது. பா.ஜனதா கட்சி கொள்கைகள் பிடித்ததால் அதில் சேர்ந்தேன்.

கேள்வி:- படங்கள் ஓ.டி.டியில் வெளியாவது குறித்து?

பதில்:- ஓ.டி.டியால் சினிமா துறைக்கு எந்த பாதிப்பும் வராது. தொலைக்காட்சி வந்தபோது தியேட்டர்களுக்கு போக மாட்டார்கள் என்று பேசினர். ஆனால் சினிமா துறை நன்றாகத்தானே இருக்கிறது. பெரிய நடிகர்கள் படங்களை ரசிகர்கள் தியேட்டர்களில் பார்க்கத்தான் விரும்புவார்கள். ஓ.டி.டியால் சினிமா துறையினருக்கு நல்லது நடக்கும்.

கேள்வி:- மீடூ மாதிரி உங்களுக்கு அனுபவம் இருக்கிறதா?

பதில்:- எனக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்படவில்லை. ஏதாவது அசம்பாவித சம்பவம் நடந்தால் உடனே சொல்லணும். யாராவது தவறாக நடந்தால் உடனே கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும். அதை விட்டு பத்து வருடங்கள் கழித்து மேடை ஏறி எனக்கு அது நடந்தது அவர் அப்படி செய்தார் என்று பேசுவதால் பயன் இல்லை. அது நடக்கும்போது கண்டித்தால்தான் அர்த்தம் இருக்கும்.

இவ்வாறு குஷ்பு கூறினார்.

Related posts