ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங்?

ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங்கை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் மேக்கப் பிரச்சினை, கமலுக்கு அறுவை சிகிச்சை, படப்பிடிப்பில் விபத்து உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கரோனா அச்சுறுத்தல் தொடங்கியது.
அதற்குப் பிறகு இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடன் தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தில் ராஜு தயாரிக்கும் 50-வது படமாக இது உருவாகவுள்ளது. ராம் சரண் நாயகனாக நடிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டார் ஷங்கர். இந்நிலையில், நேரடி இந்திப் படமொன்றை விரைவில் ஷங்கர் இயக்குவார் எனத் தெரிகிறது.
‘அந்நியன்’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தவுடனே, அதே கதையை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டார் ஷங்கர். ஆனால், எதிர்பார்த்த அளவுக்குப் பேச்சுவார்த்தை முடிவடையவில்லை. தற்போது ரன்வீர் சிங் நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்க பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்காக ‘சர்க்கஸ்’ படப்பிடிப்பிலிருந்து ரன்வீர் சிங் சென்னை வந்து இயக்குநர் ஷங்கரைச் சந்தித்துப் பேசியுள்ளார். இதனை பாலிவுட் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தப் படத்தை இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் ரன்வீர் சிங்.
அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் எப்போது படப்பிடிப்பு, யார் தயாரிப்பாளர் உள்ளிட்ட விஷயங்கள் பேசி முடிவானவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

Related posts