திகில் கதையில் நடித்ததால் காஜல் அகர்வாலை தொடரும் பேய் பயம்

லைவ் டெலிகாஸ்ட் என்ற திகில் வெப் தொடரில் பேயாக நடித்த நடிகை காஜல் அகர்வால் தனது பயங்கர அனுபவங்கள் பற்றி பேசி உள்ளார்.

பேய் கதையம்சம் உள்ள படங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளதால் அதுமாதிரியான படங்கள் அதிகம் வருகின்றன. நடிகர்-நடிகைகளும் திகில் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். நடிகை காஜல் அகர்வால் வெங்கட் பிரபு இயக்கிய லைவ் டெலிகாஸ்ட் என்ற திகில் வெப் தொடரில் பேயாக நடித்த பயங்கர அனுபவங்கள் பற்றி பேசி உள்ளார்.

அவர் கூறும்போது, “இந்த தொடருக்கான படப்பிடிப்பை நடத்த மலை உச்சியில் இருந்த ஒரு வீட்டை தேர்வு செய்தனர். அந்த வீடு தனியாக பயங்கரமாக இருந்தது. பெரும்பகுதி படப்பிடிப்பு அங்குதான் நடந்தது. அந்த இடம் என்னை பயமுறுத்துவதாக இருந்தது. படப்பிடிப்பு முடிந்த பிறகும் திகில் படத்தில் நடித்த அச்சத்தினால் என்னால் பல நாட்கள் தூங்க முடியவில்லை.

படப்பிடிப்பு இல்லாத நேரத்திலும் அந்த வீட்டில் நான் தனியாக இருப்பது போன்ற பிரமை என்னை தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டே இருந்தது. அதை இப்போது நினைத்தாலும் எனக்கு குலை நடுக்கமாக உள்ளது. தொடரை பார்க்கும் ரசிகர்களுக்கும் இந்த பயம் வரும்” என்றார்.

Related posts