மீண்டும் இணைகிறது சூர்யா – ஜோதிகா ஜோடி?

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சூர்யா – ஜோதிகா ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிகிறது.
2006-ம் ஆண்டு சூர்யா – ஜோதிகா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு முன்பு இருவரும் இணைந்து நடித்தாலும், திருமணத்துக்கு பின்பு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இருவரும் இணைந்து ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘உயிரிலே கலந்தது’, ‘காக்க காக்க’, ‘பேரழகன்’, ‘மாயாவி’, ‘சில்லுனு ஒரு காதல்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
தற்போது 2டி தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, ஜோதிகா நடிக்கும் படங்களை சூர்யா தயாரித்து வெளியிட்டு வருகிறார். ஆனால், சூர்யா – ஜோதிகா ஜோடி இணைந்து நடிப்பதற்கு பல்வேறு இயக்குநர்கள் கதைகள் சொல்லி வந்தனர். எதுவுமே சரியாக இல்லை என்று தவிர்த்து வந்தனர்.
ஆனால், ‘சில்லுக்கருப்பட்டி’ பட வெளியீட்டுக்குப் பிறகு ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சூர்யா – ஜோதிகா ஜோடி இணைந்து நடிக்க விரும்பியது. இது தொடர்பாக இருவருமே தனித்தனியாக தங்களுடைய விருப்பத்தைத் தெரிவித்தார்கள். இயக்குநர் ஹலிதா ஷமீமோ பாராட்டுக்காகச் சொல்கிறார்கள் என்று அமைதியாக இருந்தார்.
தங்களுடைய கதைக்காகவே காத்திருப்பதாக ஹலிதா ஷமீமிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக, உண்மையாகவே தான் சொல்லியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து இந்த ஊரடங்கில் இருவருக்காகவும் கதையொன்றை எழுதியுள்ளார் ஹலிதா ஷமீம். இந்தக் கதையை முழுமையாக முடித்து இருவரும் படிப்பதற்குக் கொடுத்துவிட்டார்.
இந்தக் கதை இருவருக்கும் பிடித்தால் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Related posts