அண்ணாத்த’ படப்பிடிப்பில் ரஜினி: வைரலாகும் புகைப்படம்

அண்ணாத்த’ படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டுள்ளார். அதன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கரோனா அச்சுறுத்தலால் நீண்ட நாட்களாக எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் தொடங்கப்படாமல் இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
நீண்ட நாட்களாகவே இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்தது. கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன்தான் படப்பிடிப்புக்கு ரஜினி வருவார் என்றெல்லாம் தகவல் வெளியானது. அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று (டிசம்பர் 13) சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்குத் தனி விமானத்தில் பயணித்தார் ரஜினி.
டிசம்பர் 15-ம் தேதி முதல்தான் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால், இன்று (டிசம்பர் 14) முதலே ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கப்பட்டுள்ள படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று தொடங்கப்பட்டுள்ள படப்பிடிப்பில் மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினி முகக்கசவம் அணிந்து அமர்ந்திருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இன்னும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகாத நிலையில், இந்தப் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.’அண்ணாத்த’ படப்பிடிப்பிலிருந்து டிசம்பர் 29-ம் தேதி சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த். டிசம்பர் 31-ம் தேதி கட்சி தொடங்கும் நாள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, மீண்டும் ஹைதராபாத் சென்று ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்க ரஜினி முடிவு செய்துள்ளார்.
—-
‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்புக்காக தனி விமானத்தில் ஹைதராபாத்துக்குச் சென்றார் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று (டிசம்பர் 12) தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அவருடைய நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’.டிசம்பர் 15-ம் தேதி ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக எப்போது வேண்டுமானாலும் ரஜினி கிளம்ப வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியானது. ஆனால், எப்போது கிளம்பவுள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை. ஏனென்றால், கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை.
இந்நிலையில், இன்று (டிசம்பர் 13) சென்னையிலிருந்து தனி விமானத்தில் ஹைதராபாத் கிளம்பினார் ரஜினி. தனி விமானத்தில் பயணிப்பதற்காக காரிலிருந்து இறங்கும் ரஜினியின் புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 15-ம் தேதி தொடங்கவுள்ள ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொள்பவர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்னும் 40% படப்பிடிப்பு உள்ளது. இதனை ஒரே கட்டமாக முடிக்கப் படக்குழு திட்டமிட்டு, அனைத்து நடிகர்களிடமும் தேதிகள் வாங்கியுள்ளது.சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தில் குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக வெற்றி பணிபுரிந்து வரும் இப்படத்துக்கு இமான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்கு இடையே டிசம்பர் 31-ம் தேதி, தனது கட்சி தொடங்கும் நாளை அறிவிப்பதற்காக சென்னைக்கு ரஜினி வந்துவிட்டுச் செல்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Related posts