கேட்கப்படாத மக்களின் குரலே போராட்டமாகும்

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.

இதனையடுத்து குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தியபோது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே விவசாயிகள் மீண்டும் 6-ந் தேதி தேசிய, மாநில நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதையொட்டி, டெல்லி எல்லைகளுக்கு விவசாயிகள் அதிக அளவில் வருவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர், சினிமா பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளித்து பிரபல திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், முகநூல் பதிவில் கூறியதாவது:-

அரசாங்கத்திற்கு அதிகாரம் மக்களால் தான் வழங்கப்படுகிறது. அரசு மக்களின் நலனையே காக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் அல்ல..

கேட்கப்படாத மக்களின் குரலே போராட்டமாகும். தேசத்தின் ஆன்மாவை பாதுகாக்கும் விவசாயிகளின் உரிமைக்காக போராடுவதும், உறுதுணையாக இருப்பதுமே ஜனநாயகம் என பதிவிட்டுள்ளார்.

Related posts