தனி தமிழ் ஈழம் அமைந்திட பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெற இருப்பதை ஒட்டி, அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன், இந்திய முதன்மை அமைச்சர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ்ஜான்சன், ஜெர்மனி சேன்சலர் ஆங்கெலா மெர்கல், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடு, அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரீசன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள், ஐ.நா. மன்றப் பொதுச்செயலாளர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர், ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத் தலைவர், இந்திய அயல் உறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல நாடுகளின் அயல் உறவுத் துறை அமைச்சர்கள், பாராளுன்ற உறுப்பினர்கள், மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில், பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட மின் அஞ்சல் கடிதங்களை அனுப்பி உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையின் இனவெறி அரசு, ஈழத்தமிழர்களைத் திட்டமிட்ட இனப்படுகொலை செய்து வருவதற்கு, அசைக்க முடியாத ஆவணங்கள் சான்றாக இருக்கின்றன.

2009 மே மாதம், மூன்று லட்சத்து 30 ஆயிரம் மக்களை, முள்ளிவாய்க்கால் என்ற இடத்திற்குள் சுற்றி வளைத்தனர். அந்த வேளையில், செய்தி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களை முடக்குவதற்காக, பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்து, வெள்ளை வேன்களில் ஆள் கடத்தி, அவர்களைக் காணாமல் போகவும் செய்தனர்.

2009-ம் ஆண்டு மே மாதம், 1,47,000 தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசு, தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை ஒடுக்கியது.

2009-ம் ஆண்டு, நோர்வே- பிரான்ஸ், கனடா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வாழ்கின்ற, புலம்பெயர்ந்து வந்த இலங்கைத் தமிழர்கள் இடையே, ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ் ஈழம் அமைவதற்கு, அவர்கள் பெரும் ஆதரவு ஆதரவு அளித்தனர்.

2011-ம் ஆண்டு மார்ச் 25 -ம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றம், ஐ.நா. அறிக்கையின் அடிப்படையில், ஒரு தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.

விடுதலைப்புலிகள் உட்பட, இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; அனைத்திற்கும் மேலாக, இலங்கையின் வடக்கு கிழக்கு மாநிலங்களைப் பிரித்து, தனித்தமிழ் அமைப் பதற்கு, ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில், பொது வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம் கோருகின்றது.

இலங்கை வடக்கு மாகாண மன்றம், 2015-ம் ஆண்டு, பிப்ரவரி 10-ம் நாள் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களை ஒன்றாக இணைக்க வேண்டும்; சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்; தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என அந்தத் தீர்மானம் கோருகின்றது. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில், ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் ஒரு பொது வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று, அந்தத் தீர்மானம் வலியுறுத்துகின்றது.

எனவே, ஐ.நா. மனித உரிமைகள் மன்றம் மற்றும் ஐ.நா.வின் அனைத்து உறுப்பு நாடுகளும் சேர்ந்து, கீழ்காணும் கோரிக்கைகளை ஆய்வு செய்து, தீர்வு காண வேண்டும் என, நாங்கள் கோருகின்றோம்.

1. ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமையை ஏற்க வேண்டும்; ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில், பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

2. 2015 பிப்ரவரி 10-ம் நாள், இலங்கை வடக்கு மாகாண மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை, ஏற்க வேண்டும்.

3. இலங்கை அரசு நடத்துகின்ற எந்த விசாரணையின் மீதும், தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை; எனவே, பன்னாட்டுக் குற்ற இயல் நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

4. இந்திய அரசு, மனித உரிமைகள் மன்ற உறுப்பு நாடுகளை ஒருங்கிணைத்து, நிகழ்ச்சி நிரல் 4-ன்படி, சிறப்பு ஆணையர் ஒருவரைத் தெரிவு செய்து, இலங்கையில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்கள், தமிழர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகளைக் கண்காணிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.

அ) இலங்கையில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்களைக் கண்காணித்து, உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்;

ஆ) தொடர்பு உடைய உறுப்பினர்களுடன், இலங்கைக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்;

இ) இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில், மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐ.நா. பொதுப்பேரவைக்கும், மனித உரிமைகள் மன்றத்திற்கும் ஆய்வு அறிக்கை வழங்க வேண்டும்;

ஈ) பிரச்சினைகளை உடனுக்குடன் வெளிக்கொணர வேண்டும்; அதிகாரபூர்வ செய்தி அறிக்கைகளை வெளியிட வேண்டும்.

இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவித்து நீதி வழங்க வேண்டும்.

இவ்வாறு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

(மாலைமலர்)

Related posts