இந்தியாவிலிருந்து எதிர்வரும் புதன்கிழமை 6 இலட்சம் தடுப்பூசி

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதியான 600,000 பேருக்கான தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
களுத்துறை, வலல்லாவிட்ட பகுதியில் நடைபெற்ற “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்வின் பங்கேற்ற ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதில் சுமார் 3 இலட்சம் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
தடுப்பூசி கிடைத்த மறுநாளே அதனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, முதற் கட்டமாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் முன்னிலையில் உள்ள, வைத்தியர்கள், தாதியர்கள், பொதுச் சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட சுகாதார பிரிவினருக்கும் அதனைத் தொடர்ந்து இப்பணியில் ஈடுபட்டுள்ள இராணவத்தினருக்கும் வழங்கப்படும் எனத் தெரிவித்த அவர், அதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் காணப்படுவோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்டும் என அவர் கூறினார்.
இந்நடவடிக்கையுடன் இணைந்தவாறு, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

——

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
அமைச்சரின் செயலாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக, கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில், கொக்கல பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன்று (24) கொழும்பிலுள்ள தனது வீட்டுக்கு திரும்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மேலும் இரு வாரங்களுக்கு அவர் தனது வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, கொரோனா தொற்றிய 5 பாராளுமன்ற உறுப்பினர்களில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஶ்ரீ.ல.மு.கா. தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீம், அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மகளிர்‌ மற்றும்‌ சிறுவர்‌ அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும்‌ ஆரம்பக்‌ கல்வி, அறநெறிப்‌ பாடசாலைகள்‌, கல்விச்‌ சேவைகள்‌ மற்றும்‌ பாடசாலைகள்‌ உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோர் தொடர்ந்தும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆரம்பக் கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு மேற்கொண்ட PCR சோதனையில், எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என, கலவி அமைச்சு விடுத்திருந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

—-
இலங்கை கடற்படைக் கப்பலில் மோதி பலியான 04 தமிழக மீனவர்களான மெசியான், செந்தில்குமார், சாம்சன், நாகராஜ் ஆகியோரின் சடலங்கள் இந்திய கரையோர காவல் படையினர் முன்னிலையில் சர்வதேச கடல் எல்லையில் நேற்று (23) காலை ஒப்படைக்கப்பட்டன.
இவர்களில், மூவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதோடு, மற்றையவர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர் என, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
மரணமான தமிழக மீனவர்களின் சடலம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றத்தில் சட்டநடவடிக்கைகளைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 4 மீனவர்களினதும் பிரேத பரிசோதனைகள் நிறைவுற்றதையடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
அதனையடுத்து யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகராலத்தில் உத்தியோகபூர்வமாக சடலங்கள் கையளிக்கப்பட்டன. யாழ். இந்திய உதவி உயர்ஸ்தானிகராலத்தின் வேண்டுகோளுக்கமைய சடலங்களை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைக்கான பொறுப்பை இலங்கை கடற்படை ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து 04 பேரின் சடலங்களும் நேற்றுமுன்தினம் இரவே காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டன.
அந்த சடலங்களையும் சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர் ஒப்படைக்க முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து இலங்கை கடற்படையினர் 04 பேரின் உடல்களையும் இந்திய கரையோர காவல்படையிடம் கையளிப்பதற்காக, நேற்றுக் காலை 7.20 மணிக்கு சர்வதேச கடல் எல்லைக்கு புறப்பட்டனர்.
அவர்களின் உடல்களை பெறுவதற்காக கோட்டைப்பட்டினத்திலிருந்து 02 விசைப்படகுகளில் 10 மீனவர்கள் வந்திருந்தனர். எனினும் இலங்கை கடற்படையினர் உத்தியோக பூர்வமாக இந்திய கரையோர காவல் படை சேவையினரிடமே ஒப்படைத்தனர்.நேற்று (23) காலை சுமார் 10.00 மணியளவில் இந்திய கரையோர காவல் படையினர் முன்னிலையில் சர்வதேச கடல் எல்லையில் 04 பேரின் சடலங்களையும் கரையோர காவல்படைக்குச் சொந்தமான ‘அதுல்யா’ (ICGS ATULYA) என்ற கப்பலிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அவர்களின் சடலங்கள் கோட்டைப்பட்டினம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு தயார் நிலையில் 04 அமரர் ஊர்தி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில் ஏற்றி மீனவர்களின் உடல்கள் இராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-
ஒப்படைக்கப்பட்ட மீனவர்களின் சடலங்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிலிருந்து கப்பலில் எடுத்து வரப்பட்டு இந்திய-இலங்கை சர்வதேச கடல் எல்லையில் 18 மைல் தூரம் மணமேல்குடிக்கும், 40 மைல் தூரம் இராமேஸ்வரத்திற்குமிடையே இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

Related posts