முதலமைச்சர் பழனிசாமி பொங்கல் வாழ்த்து

நாட்டில் நலமும் வளமும் பெருகட்டும் என தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தைத்திங்கள் முதல் நாள் உழவர் திருநாளாகவும், கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் இந்த பொங்கல் பண்டிகை என்பது சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது.

பொங்கலுக்கு முந்தைய நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை எரிக்கும் வழக்கம் நிலவி வருகிறது. தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பொது மக்களுக்கு தங்களது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-“தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உழவுத் தொழிலை போற்றும் தைப்பொங்கல் திருநாளில், மக்கள் புத்தாடை அணிந்து, இல்லங்களில் வண்ணக் கோலங்களிட்டு கரும்பு, மஞ்சள், இஞ்சி, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை படையலிட்டு, புதுப்பானையில் புது அரிசியிட்டு, அது பொங்கும்போது, ‘பொங்கலோ, பொங்கல்’ என்று உற்சாகமாக குரல் எழுப்பி, இறைவனை வணங்கி, பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்வார்கள்.

Related posts