‘அண்ணாத்த’ படப்பிடிப்பு: ரஜினிகாந்த் புதிய முடிவு

சட்டசபை தேர்தல் முடிந்த பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

ரஜினிகாந்த் பங்கேற்ற அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்தபோது 4 பேர் கொரோனா தொற்றில் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் படப்பிடிப்பை நிறுத்தினர். ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என்றாலும் சில நாட்கள் தனிமைப்படுத்தி ஐதராபாத்திலேயே தங்கி இருந்தார். பின்னர் ரத்த அழுத்த பிரச்சினை காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்.

படப்பிடிப்புக்காக உடல்நிலையை கருதி ரஜினிகாந்த் மீண்டும் ஐதராபாத் செல்வது சிரமம் என்று கருதிய படக்குழுவினர் சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். அடுத்த மாதம் (பிப்ரவரி) சென்னையில் படப்பிடிப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஆனால் தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து ஜூன் அல்லது ஜூலை மாதத்துக்கு படப்பிடிப்பை தள்ளி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கிறார்கள். சிவா இயக்கும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் ஆகியோரும் படத்தில் உள்ளனர்.

Related posts