உதவி டைரக்டரை திடீர் திருமணம் செய்துகொண்டது ஏன் ?

திருமணம் செய்து கொண்டதால் சினிமாவில் இருந்து விலக மாட்டேன்.

சினிமா உதவி டைரக்டரை திடீர் திருமணம் செய்து கொண்டது ஏன்? என்பதற்கு நடிகை ஆனந்தி விளக்கம் அளித்தார்.

பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி. இவர், ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருகிறார். இந்த நிலையில், சாக்ரடீஸ் என்ற உதவி டைரக்டரை ஆனந்தி திடீர் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் நடந்தது.

சாக்ரடீஸ், ‘மூடர் கூடம்’ படத்தை இயக்கிய நவீனின் உறவினர். அவரிடம் உதவி டைரக்டராக இருந்தவர். ‘அலாவுதீனின் அற்புத கேமரா,’ ‘அக்னி சிறகுகள்’ ஆகிய 2 படங்களில் உதவி டைரக்டராக பணிபுரிந்து வருகிறார்.

சாக்ரடீசை திடீர் திருமணம் செய்து கொண்டது ஏன்? என்பது பற்றி ஆனந்தி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ‘‘நானும், சாக்ரடீசும் 4 வருடங்களாக காதலித்து வந்தோம். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு எடுத்திருந்தோம். அந்த நாளுக்காக இருவரும் காத்திருந்தோம். அந்த நாள் சமீபத்தில் அமைந்தது.

பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். திருமணம் செய்து கொண்டதால் சினிமாவில் இருந்து விலக மாட்டேன். தொடர்ந்து நடிப்பேன். என் கைவசம் 4 படங்கள் உள்ளன. அந்த நான்கு படங்களிலும் முதலில் நடித்துக்கொடுப்பேன். அதன் பிறகு புதிய படங்களை ஒப்புக்கொள்வேன்.’’

இவ்வாறு ஆனந்தி கூறினார்.

Related posts