இயல்புநிலைக்கு திரும்பும் இலங்கை

இலங்கையில் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த பதற்றம் படிப்படியாக தணிந்து வருகிறது. இருப்பினும் நாடு முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இலங்கை கடந்த 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து 8 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.அமைப்பு பொறுப்பேற்றது. இதன் தொடர்ச்சியாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

இதனால் கடந்த ஒருவாரமாக இலங்கை முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது. இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என அதிபர் சிறிசேனா குற்றம் சாட்டினார். இதனையடுத்து இலங்கை பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் இலங்கை காவல்துறை தலைவர் பூஜித்த ஜெயசுந்தரா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் இலங்கையின் புதிய காவல்துறை (பொறுப்பு) தலைவராக மூத்த அதிகாரி சி.டி.விக்ரமரத்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் படிப்படியாக பதற்றம் தணிந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த ஒருவாரமாக அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு நேற்றிரவு தளர்த்தப்பட்டது. பெரும்பாலான ஊழியர்கள் அலுவலகங்களுக்கு பணிக்கு திரும்பினர். தீவிர சோதனைக்கு பின்னரே அவர்கள் அலுவலகங்களில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் கடந்த கடந்த ஒருவாரமாக வெறிச்சோடி கிடைத்த சாலைகளில் வாகனங்கள் இயங்க துவங்கியுள்ளன

Related posts