பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராய்

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகை ஐஸ்வர்யா ராய், 10 மாதங்களுக்கு பிறகு வெளியே வந்தார்.

இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கி வருகிறார். தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இரண்டு பாகங்களாக தயாராகிறது. இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழனாக சரத்குமார், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமியும், குந்தவையாக திரிஷாவும் வருகிறார்கள். ஐஸ்வர்யாராய் இருவேடங்களில் நடிப்பதாகவும், அதில் ஒன்று வில்லி வேடம் என்றும் கூறப்படுகிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே தாய்லாந்து காடுகளில் நடந்தது. தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடக்கிறது.

படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ஐஸ்வர்யாராய் ஐதராபாத் வந்துள்ளார். கொரோனா காரணமாக 10 மாதங்களாக வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்த அவர் முதல் தடவையாக வீட்டை விட்டு வெளியேறி பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்து இருக்கிறார். ஐஸ்வர்யாராயுடன் அவரது கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யா ஆகியோரும் வந்துள்ளனர். 33 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பில் அவர் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கையோடு படப்பிடிப்பு நடக்கிறது.

Related posts