முல்லை கதாபாத்திரத்தில் நானா? – சரண்யா விளக்கம்

முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு சின்னத்திரை நடிகை சரண்யா விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. டிசம்பர் 9-ம் தேதி நசரத்பேட்டையில் இருக்கும் தனியார் ஹோட்டலில் சித்ரா தற்கொலை செய்துகொண்டார். இது சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது முல்லை கதாபாத்திரத்தில் சித்ராவுக்குப் பதில் வேறு யார் நடிக்கவுள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் சரண்யா நடிக்கவுள்ளதாகத் தகவல் பரவியது.
தற்போது இந்தத் தகவல் தொடர்பாக சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:
” ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் வேறு ஒருவரை மாற்றுவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. அது உண்மையல்ல. முல்லை கதாபாத்திரத்தில் வேறு ஒருவரை மாற்றுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. தன்னுடைய நிறைவான நடிப்பினால் முல்லையாக அவர் அங்கீகாரம் பெற்றுவிட்டார். அது எப்போதும் மக்கள் மனதிலேயே இருக்க வேண்டும். நான் அதை மதிக்கிறேன். மேலும் அது அப்படியே இருக்க வேண்டும் என விரும்புகிறேன்”.
இவ்வாறு சரண்யா தெரிவித்துள்ளார்.

Related posts