ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து செய்தி

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் சகலரும் தாம் எதிர்பார்க்கும் உள அமைதி கிடைக்க பிரார்த்திப்பதாக தீபாவளியை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், முழு உலகமும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பல்வேறு பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ள இச்சந்தர்ப்பத்தில் சமயக் கிரியைகளில் ஈடுபடுவது மனித உள்ளங்களுக்கு அமைதியை தருகின்றது. இந்த தீபத் திருநாளில் அந்த அமைதிக்காக எமது நாட்டிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து இந்துக்களும் ஒருமனதாக கடவுளுக்காக அர்ப்பணிப்புகளை செய்வர் என்பது எனது நம்பிக்கையாகும். அது சிறந்ததோர் சமூகத்தையும் ஆரோக்கியமான வாழ்வையும் கட்டியெழுப்பும் எமது நோக்கத்திற்கு ஆசீர்வாதமாக அமையும்

தீபாவளி பண்டிகை தினமான இன்று அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.

தீபத்திருநாள் தீபாவளி பண்டிகையானது அனைத்து உள்ளங்களிலும் இருள் நீங்கி ஒளிபெற்று நல்வாழ்வு வாழ்வதற்கான பிரார்த்தனையுடன் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ளும் கலாசார விழா என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. இச்சந்தர்ப்பத்தில் சமயக் கிரியைகளில் ஈடுபடுவது மனித உள்ளங்களுக்கு அமைதியை தருகின்றது. அந்த அமைதிக்காக அனைத்து இந்துக்களும் ஒரு மனதாக கடவுளுக்காக அர்ப்பணிப்புகளை செய்வார்கள் என்ற நம்பிக்கை உண்டு, அது சிறந்ததோர் சமூகத்தையும் ஆரோக்கியமான வாழ்வையும் கட்டியெழுப்பும் நோக்கத்திற்கு ஆசியாக அமையுமென குறிப்பிட்டுள்ளார்.

——

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சகல இந்து அடியார்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இருளை அகற்றி ஒளி ஏற்றும் இந்து மக்களின் உயர்ந்த சமயப் பண்டிகைத் தினமான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதிற் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இருட்டு வழியிற் தீபம் இருந்தால் அதுவே வழிக்குத் துணையாக அமையும். மனித வாழ்க்கைப் பாதைக்கு அருட்தீபம் துணை நின்றால் வாழ்வு சுபீட்சமாகும். அத்தகைய அருட் தீபமாகிய ஆன்மீக ஞான ஒளியை இறைவழிபாடு மூலம் பெறும் சிறப்பு வாய்ந்த நன்னாளே தீபாவளித் திருநாள். தேசிய ஒற்றுமைக்கு இது ஒரு சிறந்த நாளாகும். எல்லா மதங்களிலும் விளக்கு ஏற்றுவதன் காரணம் இருளையும் அறியாமையையும் அகற்றி ஒளியை பரப்புவதற்கே. தீபாவளியும் அதன் எதிர்பார்ப்புகள் நிறைந்த தீப ஒளியும் சமூகங்களுக்கு மத்தியிற் சிறந்த புரிந்துணர்வுக்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. மிக நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்துவைத்திருந்த எல்லா வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இத் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம். இந்த ஒளியை நாம் அணைய விடாமல் பாதுகாத்து மறுபடியும் இருளுக்குள் மூழ்காமல் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்

இன்று நம் தேசம் “நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” எனும் அரசாங்கத்தின் தேசிய கொள்கைக்கு அமைவாக ஒளிநிறைந்த வளர்ச்சிப் பாதையிற் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் நாம் முன்னேற்றம் காண முயல்கின்றோம். இன்று உலகையே அச்சுறுத்திவரும் கொவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து இலங்கை மக்களைப் பாதுகாக்கும் பணியினை அரசாங்கம் மக்கள் அனைவரதும் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக செயற்படுத்தி வருகின்றது. கொவிட்-19 நோய்த்தொற்றிருந்து இலங்கைத் திருநாடு விரைவில் மீள்வதற்கும் எம் மக்களுக்கு எல்லா சுபீட்சங்களையும் தரும் நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக இத்தீபாவளித் திருநாள் அமையட்டும்.

இலங்கைவாழ் இந்து மக்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
——–

நிரந்தர ஒளியேற்றவே ஓய்வின்றி உழைக்கின்றோம்

ஒளிமயமான எதிர்காலம் ஒவ்வொருவருக்கும் வாய்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்களை உணர்த்தும் வெளிப்பாடாகவே தீபங்கள் ஏற்றி தீமைகள் அகன்றதென மகிழ்ந்து கொண்டாடும் தீபத்திருநாளில் அனைவரினதும் எண்ணங்களும் ஈடேற வேண்டுமென வாழ்த்துகின்றேன் என கடற்றொழில் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள தீபத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது: தமிழ் மக்கள் தாம் எதிர்கொண்டுள்ள அனைத்து வகைப் பிரச்சனைகளுக்கும் கௌரவமானதும், நியாயமானதுமான தீர்வுகள் கிடைக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

அதனை அடைந்து கொள்ள தேசிய நல்லிணக்கம் எனும் ஒளிவிளக்கை ஏந்தி பயணிக்க தமிழ் மக்கள் முன்வர வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

இருளை நீக்க வீடுகளில் தீபங்களை ஏற்றுவதைப் போல நம்மைச் சூழவுள்ள பின்னடைவுகளிலிருந்தும், கல்வி மற்றும் பொருளாதார சரிவுகளிலிருந்தும் நாம் முன்னோக்கி பயணிக்க உறுதிகொள்ளவேண்டும்.

வளமான தேசமும், நம்பிக்கையான எதிர்காலமும் உறுதிப்படுத்தப் படாதவரை தமிழ் மக்கள் எதிர் கொண்ட பிரச்சினைகள் தீராபிரச்சினைகளாகவே இருக்கப் போகின்றது. அத்தகைய நிலையே தொடரவேண்டும் என தமது சுயநலன்களை முன்னிருத்தும் அரசியல் வாதிகள் விரும்புகின்றனர்.

ஆனால் எமது ஓய்வின்றிய உழைப்பும் கடினமான முயற்சிகளும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கும், அன்றாடப் பிரச்சனைகளுக்கும், அபிவிருத்தி சார்ந்த பிரச்சனைகளுக்கும் தேசிய நல்லினக்கத்தின் வழியில் நடைமுறை சாத்தியமான அணுகுமுறை ஊடாக பொறருத்தமான தீர்வுகளை பொற்றுக்கொடுப்பதே ஆகும்.

பண்டிகைக் காலங்களில் தமிழ் மக்களின் வாழ்வில் ஒளிவீச வேண்டும் என அவரவர் அறிக்கைகள் விடுவதால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்து விடாது. மாறாக அத்தீர்வுகளை அடைந்து கொள்வதற்க்கான விருப்பமும், அர்ப்பணிப்பும், உழைப்பும் இருக்க வேண்டும்.

அந்த உறுதியைச் சுமந்தவாறே கரடு முறடான பாதையாயினும், அரசியலில் நாம் எதிர்பார்த்த பலம் கிடைக்காத போதும் கிடைத்த அதிகாரத்தை மக்கள் நலனை முன்நிறுத்தி உழைக்க வேண்டுமென உறுதியேற்றுள்ளோம்.

எமது உழைப்பும், அர்ப்பணிப்பும் தமிழ் மக்களைச் சூழ்ந்துள்ள இருளை விலக்கி நிரந்தர ஒளியை கொடுக்கும் என்று நம்புவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts