நடிகை காஜல் அகர்வால் சினிமாவை விட்டு விலகல்?

நடிகை காஜல் அகர்வால் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருப்பதுபோல் இருப்பதாக பரபரப்பாகி உள்ளது.

நடிகை காஜல் அகர்வால் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் அவர் தொடர்ந்து நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் தற்போது அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருப்பதுபோல் இருப்பதாக பரபரப்பாகி உள்ளது. அந்த பதிவில். “இது தாமதமான முடிவுதான். இந்த முடிவை நான் முன்பே எடுத்து இருக்க வேண்டும். உலகத்துக்கு தெரிகிற மாதிரி கடிதமாக வெளியிட வேண்டி வந்துள்ளது.

பிறகு வருத்தப்படுவதை விட இப்போதே முடியாது என்று சொல்வது நல்லது. ஒரு சிறிய வைரஸ் உலகத்தையே மாற்றிவிடும் என்று நான் நினைத்து பார்க்கவில்லை. கண்ணுக்கு தெரியாத கொரோனாவுக்கு மொத்த உலகமும் பயந்து கொண்டு இருக்கிறது. எனது வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளும்படி இது செய்து விட்டது. எதிர்கால வாழ்க்கை மீது எனது எண்ணம் இப்போது மாறி விட்டது. இப்போதைய எனது வாழ்க்கை முறையை முழுதாக மாற்றிக்கொள்ள முடிவு செய்து இருக்கிறேன்.

பாதுகாப்பாக இருக்க எவ்வளவு கடுமையான முடிவையும் எடுக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். இந்த பதிவு ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்பான வாழ்க்கைக்காக காஜல் சினிமாவை விட்டு விலக முடிவு செய்து விட்டாரோ என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.

Related posts