கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்

டூயட் காட்சிகளை தவிர்ப்பேன் என்றும் கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன் என நடிகர் யோகி பாபு கூறினார்.
திரையுலகில் யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும்? என்பதை யாராலும் கணிக்க முடியாது. இதற்கு சமீபகால உதாரணம், யோகி பாபு. துணை நடிகராக பல படங்களில் தலையை காட்டிய இவர் இப்போது, முன்னணி நடிகராகி விட்டார். நகைச்சுவை நடிகராக இருந்தவர், ‘கதைநாயகன்’ ஆகிவிட்டார்.
அப்படி இவர் கதைநாயகனாக நடித்த ‘பேய் மாமா’ படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. படத்தின் டைரக்டர் சக்தி சிதம்பரம் வரவேற்று பேசினார். விழாவில் யோகி பாபு பேசியதாவது:-
“நான், நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நடிப்பேன். கதாநாயகனாக ‘டூயட்’ பாட மாட்டேன். அதுபோன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்ப்பேன். கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன். என் முகம் நகைச்சுவை வேடங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை நான் அறிவேன்.
‘பேய் மாமா’ படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தில் நல்ல கருத்து இருக்கிறது. கொரோனா நோயை விரட்டி, பொதுமக்களுக்கு நன்மை செய்பவனாக வருகிறேன். தொடர்ந்து இதுபோன்ற வேடங்களில் நடிப்பேன். கதாநாயகிகளுடன் மரத்துக்கு மரம் ஓடிப்பிடிக்கும் காதலராக ஒருபோதும் நடிக்க மாட்டேன்.
‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவின் காதலராக நடித்தது கூட, ரசிகர்களை சிரிக்க வைப்பதற்காகத்தான்.”
இவ்வாறு யோகி பாபு பேசினார்.

Related posts