ரூ. 1 கோடி நிதி வழங்கிய நடிகர் அக்க்ஷய் குமார்

அசாம் வெள்ள நிவாரண பணிகளுக்கு பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமார் ரூ. 1 கோடி நிதி வழங்கியுள்ளார்.

அசாமில் கடந்த ஜூலை மாதம் ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த தொடர் கனமழையால், பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 ஆறுகள் மற்றும் அதன் துணை ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 30 மாவட்டங்களில் உள்ள சுமார் 3 ஆயிரம் கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கின. இதையடுத்து, அங்கு வசித்த மக்கள், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டார்கள். சுமார் 50 லட்சம் போ் பாதிக்கப்பட்டார்கள். 80 போ் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் அசாம் வெள்ள நிவாரண பணிகளுக்கு பிரபல பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமார் ரூ. 1 கோடி நிதி வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி சர்பானந்தா சோனாவால் தனது டுவிட்டர் பதிவில், அசாமின் இக்கட்டான நிலையில், வெள்ள நிவாரணத்திற்கு, நடிகர் அக்க்ஷய் குமார் தனது பங்களிப்பாக, ரூ. 1 கோடி வழங்கியதன் மூலம் அசாமின் உண்மையான நண்பனாக உள்ளீர்கள். இறைவன் அருளால் உங்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Related posts