பாகுபலியை போன்று பிரபாஸின் அடுத்த பிரம்மாண்ட 3டி படம் ஆதிபுருஷ்

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

பாகுபலி படத்தை அடுத்து சாஹோ என்ற படத்தில் நடித்தார் பிரபாஸ். தற்போது பிரபாஸின் 20-வது படத்தை, ‘சாஹோ’ படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ராதே ஷ்யாம் என பெயரிட்டுள்ளனர். இதன் இயக்குநர் கே கே ராதா கிருஷ்ணா.

அடுத்து நாக் அஸ்வின் இயக்கத்தில் தீபிகா படுகோன் உடன் இணைந்து நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பிரபாஸின் 21-வது படமான இதனை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தன்ஹாஜி பட இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற படத்தில் நடிக்கிறார் பிரபாஸ். இத்திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் இந்தி மற்றும் தெலுங்கில் உருவாகிறது. தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2021-ல் தொடங்கி 2022-ல் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூஷன் குமார், கிரிஷான் குமார், ஓம் ராவத், பிரசாத் சுடார் மற்றும் ராஜேஷ் நாயர் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். தற்போது இந்தப் படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

ஆதிபுருஷ் படத்தை பற்றி பிரபாஸ் கூறியதாவது:-

ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சவால்கள் நிறைந்தது. ஆனால் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை திரையில் கொண்டு வருவது மிகவும் பொறுப்புமிக்கது மற்றும் பெருமைக்குரியது. இயக்குநர் ஓம் விசேஷமாக வடிவமைத்துள்ள இந்த காவிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். நம் நாட்டின் இளைஞர்கள் தங்கள் அன்பை இந்தப் படத்தின் மீது பொழிவார்கள் என்று உறுதியாக கூறுகிறேன்.” என்றார்.

இயக்குநர் ஓம் ராவத் கூறுகையில், “இந்தப் படத்தில் நடிக்கவும் என்னுடைய நோக்கத்தையும் ஒப்புக்கொண்ட பிரபாஸுக்கும், என்னுடைய கனவு திரைப்படத்தை வெளியிட நிபந்தனையற்ற ஆதரவையும் வழங்கிய பூஷனுக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். மிகப்பெரிய கனவுகளோடும், பெருமிதத்தோடும், இதற்கு முன் பார்த்திராத ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு தரும் உறுதியோடும் இந்த பயணத்தை தொடங்குகிறோம்.” என்றார்.

Related posts