இன்று முதல் அமைதி காலம்

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் இறுதிப் பிரசாரக் கூட்டங்கள் நேற்று (02) நள்ளிரவுடன் நிறைவடைந்தன.

அதன்படி, தேர்தல் இடம்பெறும் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை அமைதி காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, பிரசாரக் கூட்டங்களை நடத்துவதும், வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்பதும், துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதும், பதாதைகளைக் காட்சிப்படுத்துவதும், சுவரொட்டிகளை ஒட்டுவதும் தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சகல ஊடகங்கள் வாயிலாகவும் முன்னெடுக்கப்படும் பிரசார நடவடிக்கைகளும் நேற்று நள்ளிரவுடன் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்தார்.

இதேவேளை, அமைதி காலத்தில் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடும் எந்தவொரு நபர் மற்றும் குழுவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

அதேபோல், எவ்வித சந்தேகமும் அச்சமும் இன்றி ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்து வாக்களிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.

Related posts